அனைத்திற்கும் ஆதியான சிவ பெருமானுக்கு மிக உகந்த நாள் மகா சிவராத்திரி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி சிவாலயங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான சிவராத்திரி வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
மகா சிவராத்திரி எப்போது?
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்ப்பிறை சதுர்த்தசி திதியே சிவராத்திரி ஆகும். மாசி மாதத்தில் வரும் தேய்ப்பிறை சதுர்த்தசி திதி மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. இந்த மாசி தேய்ப்பிறை சதுர்த்தசி திதியானது மார்ச் மாதம் 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு தொடங்கி, அடுத்த நாளான 9ம் தேதி மாலை 6 மணி வரை உள்ளது. இதன் காரணமாகவே மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
மார்ச் மாதம் 8ம் தேதி இரவு 8.30 மணிக்கு பிறகு சிவராத்திரி பூஜையை தொடங்க வேண்டும். மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை வணங்கி அவரை பூஜித்தால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி அனைத்து செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை ஆகும். மகா சிவராத்திரி தினத்தில் உலகெங்கும் உள்ள சிவாலயங்கள் களை கட்டி காணப்படும். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்,
பக்தர்கள் பரவசம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், திருவண்ணாமலை மட்டுமின்றி அனைத்து சிவாலயங்களிலும் அன்று இரவு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த மகா சிவராத்திரி தினத்தில்தான் பார்வதி தேவி சிவபெருமானை பூஜித்து உலக நன்மைகளுக்காக பல வரங்களை பெற்றார் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. மகா சிவராத்திரி தினத்தில் விரதம் இருக்க முடிந்தவர்கள் விரதம் இருந்து சிவபெருமான் கோயிலுக்கு சென்று வணங்கினால் நன்மைகள் உண்டாகும்.














