தமிழ் திரையுலகின் கேப்டன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி வரை உள்ள அவரது கடைகோடி தொண்டர்கள் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர்.
கண்ணீர் கடலில் தமிழ்நாடு:
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்ந்து அடுத்தவர்களுக்றகு உதாரணமாக இருப்பவர்கள் வெகு சிலரே ஆவார்கள். அப்படி இன்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கே உதாரணமாக இருப்பவர் விஜயகாந்த். அவர் சினிமாவில் கடைசியாக 2010ம் ஆண்டு நாயகனாக நடித்திருந்தார். அதன்பின்பு, 2015ம் ஆண்டு தனது மகன் சண்முகபாண்டியன் நடித்த சகாப்தம் படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார்.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தவர், அரசியலை விட்டு 7 ஆண்டுகளுக்கு மேல் ஒதுங்கியிருந்தவருக்கு இன்று தீவுத்திடலில் அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். ஒட்டுமொத்த ஊடகமும், ஒட்டுமொத்த சமூக வலைதளங்களும் கேப்டனுக்காக கண்ணீர் விட்டு வருகின்றனர். இத்தனை பேரையும், புகழையும் ஒரு நடிகனாக அவர் சம்பாதிக்கவில்லை. ஒரு மனிதனாக சம்பாதித்துள்ளார்.
தடுமாறும் தமிழ் திரையுலகம்
ஒரு நடிகர் இறந்தால் வழக்கமாக சக நடிகர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு மரியாதைக்காக சில வார்த்தைகள் கூறுவார்கள். ஆனால், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அவரது உடலைப் பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் வார்த்தை வராமல் கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கிறது. ஏனெ்னறால், இன்று முன்னணி நடிகர்களாக பிரபலங்களாக இருக்கும் பலரும் அவரால் திரைவாழ்வில் உச்சம் பெற்றவர்கள். விஜய்க்காக செந்தூர பாண்டி படத்தில் கதையை கூட கேட்காமல் நடித்துக்கொடுத்தவர்.
அவரிடம் உதவி பெறாத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழ் திரையுலகத்தை உண்மையில் ராஜ்ஜியம் செய்தவர். அவருக்கு முன்பு அப்படி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும் தாங்கிப்பிடித்தவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. அவருக்கு பிறகு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும் தாங்கிப்பிடித்தவர் விஜயகாந்த். குழந்தைகள், பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள் என பலரும் குவிந்து வருகின்றனர்.
இனி இப்படி ஒரு மனிதர் பிறப்பாரா?
தான் நடிக்கும் படங்களில் மட்டும் நாயகனாக இல்லாமல் நிஜ வாழ்விலும் கள்ளம் கபடம் இல்லாத மனிதராக வாழ்ந்து மறைந்துள்ளார் விஜயகாந்த். இப்டி ஒரு மனிதர் இனி இந்த தமிழ் திரையுலகத்தில் அவதரிப்பாரா? என்றால் நிச்சயம் சந்தேகம் என்றே சொல்ல வேண்டும். அண்ணா, எம்,ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற முதலமைச்சர்களுக்கு வந்த நிகரான மக்கள் கூட்டம் தீவுத்திடலில் குவிந்து வருகின்றனர்.














