தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பதற்கு காரணம் நடிகர் விஜய் ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியது முதலே அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
களத்தை மாற்றிய கரூர்:
விஜய் தனது அரசியல் களத்தை முடிவெடுத்த நிலையில், கரூர் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் அரசியல் களம் கடந்த ஒரு மாதமாக முடங்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் அவர் அரசியல் களத்தில் எந்தளவு தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்பதையே வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது.
நேரில் செல்லாமல், நேரில் வரவழைத்த விஜய்:
அனுபவமின்மை, முறையான வழிகாட்டிகள் இல்லாதது போன்ற பல்வேறு தடுமாற்றங்களுடன் கடந்த ஒரு மாதமாக அவதியுற்று வரும் விஜய் தற்போது கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை இன்று சென்னைக்கே நேரில் வரவழைத்து சந்தித்து பேசியுள்ளார்.
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான நிகழ்வாகவே இது பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு குடும்பத்தில் உயிரிழப்பு என்றால் பாதிக்கப்பட்டவர்களை அரசியல் தலைவர்கள்தான் நேரில் சென்று சந்திப்பது வழக்கம். அந்த தருணத்தில் செல்ல முடியாவிட்டாலும் சில நாட்கள் கழித்து செல்வது வழக்கம். ஆனால், வேறு எங்கும் இல்லாத புதுமையாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களை தன்னைப் பார்க்க விஜய் அழைத்து வந்துள்ள சம்பவம் பெரும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
விஜய்க்கே எதிர்வினையா?
இது விஜய்க்கு எதிர்வினையாற்றவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை தான் சந்திக்க நிச்சயம் நேரில் வருவேன் என்று ஏற்கனவே உறுதியளித்திருந்தார். மேலும், விஜய் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறார் என்றும், அவர் பனையூர் பண்ணையார் என்றும் அவர் மீது பலத்த விமர்சனங்கள் அவர் அரசியல் களத்தில் நுழைந்தது முதலே இருந்து வருகிறது.
நெருக்கடி காலத்தில், தன்னைப் பார்க்க வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்காத ஒருவரை எப்படி மக்கள் தலைவனாக ஏற்க முடியும்? என்ற கேள்வி கடுமையாக சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. விஜய்க்கு காவல்துறை தற்போது வரை அனுமதி அளிக்காதது, விசாரணை முடியும் வரை விஜய் கரூர் செல்ல சிபிஐ தடை விதித்துள்ளது என்று தவெக தரப்பில் கூறப்பட்டாலும் அதை அதிகாரப்பூர்வமாக தவெக-வினர் மக்களுக்கு இதுவரை தெரிவிக்கவில்லை.
நம்பிக்கையை இழக்கிறாரா?
இதுபோன்று தவெக-வும், விஜய்யும் செயல்பட்டு வந்தால் அவருக்கு பலமாக உள்ள முதல் தலைமுறை வாக்குகள், ரசிகர்களின் வாக்குகளையும் அவர் இழக்க நேரிடும் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், விஜய்க்கு அரசியலின் அடிப்படை பண்பும் தெரியவில்லை என்றே பலரும் விமர்சித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி ராமதாஸ் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு இருந்தபோதும் கூட விஜய் தொலைபேசியில் விசாரிக்கவில்லை. திருமாவளவன் அவர் நலம் பெற வேண்டும் என்று கூறிய சூழலில், விஜய் விசாரிக்கத் தவறிவிட்டார். அரசியலுக்கு அப்பாற்பட்டு நலம் விசாரிப்பது தமிழக அரசியலில் பண்பாகும்.














