பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமாக இருப்பவர் சவுக்கு சங்கர். இவர் தமிழக அரசு மீதும் தி.மு.க. மீதும் தொடர்ந்து சரமாரியான குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார். சமீபத்தில் யூ டியூப்பில் அளித்த நேர்காணலில் சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார்.
சவுக்கு சங்கர் கைது:
இந்நிலையில் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவை சைபர் கிரைம் காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்படுகிறார். கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
விபத்து:
இதனிடையே சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் வரும் வழியில் சிறிய விபத்துக்கு உள்ளானது. இதில் சங்கர் மற்றும் காவல் துறையினர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கோவைக்கு வரும் வழியில் இருந்த ஒரு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின்னர், கோவைக்கு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை காவல் துறையினர் அழைத்து வருகின்றனர். சவுக்கு சங்கர் கைதுக்கு சிலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.














