மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி பங்கீடு, தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. தனது கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், என பிரம்மாண்ட கூட்டணி அமைத்துள்ளது.
பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி:
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடன் பெரிய கட்சிகள் ஏதும் கூட்டணி அமைக்கவில்லை. தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தொகுதிப் பங்கீடு இறுதியானவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட தமிழகத்தில் பெரும் செல்வாக்குள்ள கட்சியாக கருதப்படும் பா.ம.க. இந்த முறை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் என்று கருதப்படுகிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அங்கு பா.ஜ.க. தலைவருடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு பெரும் எதிர்ப்புகள் நிலவி வரும் சூழலில், பா.ம.க. அவர்களுடன் கூட்டணி வைப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணியில்லை என்று கூறி வந்த பா.ம.க. கடந்த தேர்தலில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தபோதே கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அதன்பின்பு, பா.ம.க.விற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்பதே குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைப்பது மீண்டும் பா.ம.க.விற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அன்புமணி ராமதாஸ் வியூகம் என்ன?
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பா.ம.க. கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் மீண்டும் பா.ஜ.க.வே ஆட்சி அமைக்க பெரும் வாய்ப்பு இருப்பதால், ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பெற்று அதன் மூலம் இணையமைச்சர் பதவியை பெற அன்புமணி ராமதாஸ் வியூகம் வகுத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்று ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைத்தாலும் அன்புமணி ராமதாசுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு ஆகும்.














