தமிழ்நாட்டில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் களத்தில் விஜய் தீவிரமாக களப்பணியாற்றத் தொடங்கியது முதலே அரசியலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
41 பேர் மரணம்:
குறிப்பாக, கரூர் சம்பவத்திற்கு பிறகு ஒட்டுமொத்த அரசியல் நகர்வுகளும் தமிழ்நாட்டில் மாறியுள்ளது. கரூரில் விஜய்யின் தவெக பரப்புரையில் நடந்த கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் எதிர்பாராத துயர சம்பவமாக இருந்தாலும், இந்த சம்பவத்தை விஜய் கையாண்ட விதமும், தவெக நிர்வாகிகள் நடந்து கொண்ட விதமும் அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
விஜய் 3 நாட்களுக்கு பிறகு வேதனை தெரிவித்த பின்னர், தவெக தரப்பிலும், கரூர் மாவட்ட தவெக தரப்பிலும் மிகப்பெரிய அளவு செயல்பாடுகள் இல்லாமலே உள்ளது. மேலும், துயர சம்பவம் நடந்து முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் அவர் இன்னும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவிக்காதது பெரும் அதிருப்தியை விஜய் மீது உருவாக்கியுள்ளது.
விஜய் கைதா?
இந்த சூழலில், விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால, இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எந்த வழக்குகளும் விஜய்க்கு எதிராக பதிவு செய்யப்படவில்லை. புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீதும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பதிவாகிய நிலையில் விஜய் மீது மட்டும் வழக்குகள் பதிவாகவில்லை.
இந்த சம்பவத்திற்கு அனுமதி பெற்றது முதல் பொறுப்பேற்றது என எந்த இடத்திலும் நேரடியாக விஜய்க்கு எழுத்துப்பூர்வமாக தொடர்பில்லை என்பதால் அவர் மீது வழக்குப்பதிவதற்கான முகாந்திரமும் இல்லை என்பதாலே காவல்துறை வழக்குப்பதிவு செய்வதற்கு தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
அதேசமயம், கரூர் சம்பவத்திற்கு முன்பு படிப்படியாக அதிகரித்து வந்த விஜய்யின் அரசியல் செல்வாக்கு கரூர் சம்பவத்தில் மிகப்பெரிய அளவு சறுக்கியுள்ளது. மேலும், அவர் இந்த நெருக்கடியான சூழலை கையாண்ட விதம் மேலும் பின்னடைவை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.
அரசு அஞ்சுவது ஏன்?
இதை ஆளுங்கட்சியான திமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைப்பு காட்டி வருகிறது. இந்த சூழலில், விஜய்க்கு எதிராக வழக்குப்பதிவு செய்தால் அது சட்டரீதியாக நிலைப்பதில் சவால் உள்ளது. மேலும், விஜய்யை கைது செய்தால் அது அவருக்கு ஆதரவான மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும் என்றும் ஆளுங்கட்சி அச்சப்படுவதாக கூறுகிறது.
தமிழ் திரையுலகம் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய்யை கைது செய்தால், அதற்கு எதிராகவும், அவருக்கு ஆதரவாகவும் அவரது கட்சியினரும், தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புகள் அதிகளவு என்று கூறப்படுகிறது. இது தேவையற்ற பதற்றத்தை அதிகரிப்பதுடன் அது விஜய்க்கு சாதகமாக அமையவும் காரணமாக அமைந்துவிடும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாகவும் விஜய்யின் சரிந்த அரசியல் செல்வாக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என்று அரசு கருதுகிறது.
ஏனென்றால், அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட பிறகு ஒட்டுமொத்த காட்சியும் மாறியது. அடுத்து நடந்த தேர்தலில் ஜெகன் ஆட்சியையும் பறிகொடுத்தார்.














