கிரிக்கெட் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய வடிவத்தை மாற்றிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு வகை கிரிக்கெட்டும் ஒவ்வொரு வகையிலான கிரிக்கெட் வீரர்களுக்கு சாதகமானதாக அமைகிறது. டெஸ்ட் கிரிக்கெட் பெரும்பாலும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். ஒருநாள் போட்டி பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமையும். டி20 பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக அமைகிறது.
பவுலர்கள் யுக்தி:
கிரிக்கெட்டில் கொண்டு வரப்பட்ட பவர்ப்ளே, ப்ரீ ஹிட் உள்ளிட்ட பல விதிகளுக்கு பிறகு பேட்ஸ்மேன்கள் ரன்களை மலை போல குவித்து வருகின்றனர். குறிப்பாக, டி20 போட்டிகளில் ரன் குவிப்பதில் புதுப்புது வரலாறு படைக்கப்பட்டு வருகிறது. ஐ.பி.எல். பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக மாறி வருகிறது.
இது பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொடரில் மட்டும் 200 ரன்கள் என்பது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. மேலும், 277 ரன்களை சன்ரைசர்சும், 272 ரன்களை கொல்கத்தாவும் குவித்து புதுப்புது வரலாறு படைத்து வருகின்றனர். இவர்களை சமாளிப்பதற்காக பந்துவீச்சாளர்கள் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளனர்.
ஸ்லோயர் அஸ்திரம்:
இந்த தொடரில் அனைத்து அணியின் பந்துவீச்சாளர்களும் கையில் எடுத்துள்ள அஸ்திரம் மெதுவாக வீசப்படும் பந்துகள் எனப்படும் ஸ்லோயர் பால், ஒயிட் யார்க்கர் பந்துகளை அதிகளவில் வீசுகின்றனர். மேலும், அவ்வப்போது ஸ்லோயர் பவுன்சர்களை வீசியும் பேட்ஸ்மேன்களை திணறடிக்கின்றனர். வேகப்பந்துவீச்சாளர்களின் பலமே அவர்களின் வேகமே ஆகும்.
ஆனால், ஐ.பி.எல். போன்ற அதிரடி கிரிக்கெட்டில் அதுவே அவர்களுக்கு பாதகமாக அமையும்.
இதனால், ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் பந்துகளை மெதுவாக வீசுவதால் பேட்ஸ்மேன்கள் அவசரப்பட்டு அடிப்பதால் விக்கெட்டை இழக்க நேரிடுகிறது. அல்லது எதிர்பார்த்த பவுண்டரியோ, சிக்ஸரோ கிடைக்காத சூழல் ஏற்படுகிறது. நேற்று சென்னை அணிக்கு கடைசி கட்டத்தில் ஹைதரபாத் வீரர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசினர்.
தாக்கத்தை ஏற்படுத்துமா?
பஞ்சாப் அணியும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் இந்த ஸ்லோயர் அஸ்திரத்தை பயன்படுத்தினர். பெங்களூர் அணிக்கு எதிராக லக்னோ அணியும் இந்த வித்தையை பயன்படுத்தினர். ஒயிட் யார்க்கரில் சிக்ஸர் அடிப்பது அனைவருக்கும் சாத்தியமற்றது. அதற்கு சரியான பயிற்சி வேண்டும். கடந்த ஐ,பி.எல். தொடர்களில் பிராவோ, பொல்லார்ட், ரஸல் மட்டுமே அதிகளவில் ஸ்லோயர் பந்துகளை வீசினர். ஆனால், இந்த தொடரில் பெரும்பாலான பவுலர்கள் இதை கடைப்பிடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக மாறியுள்ளது. இந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் வகையில் பந்துவீச்சாளர்களும் புதிய ட்ரிக்கை கையில் எடுத்திருப்பது பாராட்டத்தக்க வேண்டியது ஆகும். இந்த தொடர் முழுவதும் பவுலர்களின் யுக்தி தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பார்க்கலாம்.














