ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த முது நிலை மருத்துவ மாணவி டாக்டர் சுகிர்தா தற்கொலை தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினர் இன்று நிருபர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி .ஆர். ரவீந்திரநாத் கூறியதாவது,
மாணவி தற்கொலை:
“கன்னியாகுமரி குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் ,முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு படித்து வந்த டாக்டர் சுகிர்தா , தற்கொலை செய்து கொண்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுத்திட வேண்டும்.
அக்கல்லூரியில் , மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. கூடுதல் கட்டணங்கள் வசூல் செய்யப்படுவதாகவும், சிறிய பிரச்சினைகளுக்கு கூட பெருந்தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. அனைத்து மாணவர்ளையும் கட்டாயமாக விடுதியிலேயே தங்கவேண்டும் என மிரட்டுவதாகவும் , சைக்கிள், கார்,பைக் ,செல்ஃபோன் வைத்துக் கொள்ளக் கூடாது என மிரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
விசாரணை வேண்டும்:
விளையாட்டு,கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது. மாணவர்களை கொத்தடிமைகள் போல் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே,இவை குறித்து விசாரிக்க ஓர் விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு உடனடியாக அமைத்திட வேண்டும். விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
இது போன்று பிற தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களிலும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன. இதனால் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களிலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
உழைப்புச் சுரண்டல்கள்:
இது தொடர்பாக நிபுணர் குழுக்களை அமைத்து , மனித உரிமை மீறல்களுக்கான காரணங்களை கண்டறிந்து போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். பல்வேறு வன்முறைகளுக்கு அடிப்படையாக உள்ள பணிச்சுமையை குறைத்திடவும், உழைப்புச் சுரண்டலை தடுத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இப்பணிச் சுமையே முதுநிலை மருத்துவ மாணவர்களிடம் ,ராகிங் போன்ற குற்றங்கள்,வன்முறைகள் நடக்க அடிப்படைக் காரணமாக உள்ளது. இதை சரி செய்ய,நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய மருத்துவர்களை,செவிலியர்களை, மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
பணிச்சுமை:
பயிற்சி மருத்துவர்களுக்கும் ,பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக 8 மணி நேரத்திற்கு மேல் பணி வழங்கக் கூடாது . இது தொடர்பாக, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தொடுத்த பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மருத்துவ மாணவர் நலவாரியங்கள்
பயிற்சி மருத்துவர்களுக்கும்,பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும் , அவர்களுக்கு தொடர்பில்லாத, அவர்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத வேலைகளை வழங்கிடக் கூடாது. NMC விதிமுறைகளுக்குப் புறம்பான,அதில் குறிப்பிடப்படாத வேலைகளை வழங்கிடக் கூடாது. போதிய அளவு ஓய்வும், உறக்கமும் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய நேரத்தில் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மன அழுத்தத்தை குறைக்கும் வகையில்,ஆரோக்கியமான பொழுது போக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இத்தகைய வசதிகளை செய்து கொடுக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ மாணவர்கள் நலன் காக்க மாநில மற்றும் கல்லூரி அளவில் ” மருத்துவ மாணவர் நலவாரியங்கள்” அமைத்திட வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் பாலியல் வன்முறைகளை தடுத்திட, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ” விஷாகா” குழுக்களை அமைத்து முறையாக செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ராகிங் தடுப்பு குழுக்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த சந்திப்பில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலக் குழு உறுப்பினருமான
டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் , டாக்டர் R.இளந்தேவன் ,
டாக்டர் R.வினோத் மற்றும் டாக்டர் விஜய் டாக்டர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.













