தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய்.
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்:
கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய் தற்போது பம்பரமாக சுழன்று வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை அவரது பக்கம் யாரும் கூட்டணிக்கு வராவிட்டாலும் முன்னணி கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
குறிப்பாக, ஆளுங்கட்சியில் கூட்டணியில் உள்ளவர்களை தனது பக்கம் இழுக்க அவர் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகிறார். தனது முதல் மாநாட்டிலே ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். விஜய்யின் அந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு அரசியல் கட்சிகள் பக்கம் கிடைத்தது.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு:
தற்போது, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அதிகாரத்திலும் பங்கு கேட்போம் என்ற குரலை முன்னெடுத்திருப்பது திமுக-விற்கு தலைவலியை உருவாக்கியுள்ளது. ஏனென்றால், காங்கிரசுடன் கூட்டணி வைக்க விஜய் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறார்.
டெல்லியிலும் ராகுல் காந்தி – சோனியா காந்தியுடன் தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தை நடந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில், அதன் எதிரொலியாகவே தற்போது ஆட்சி, அதிகாரத்திலும் பங்கு என்ற குரலை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது.
தீர்மானிக்கப்போகும் கூட்டணி கட்சிகள்:
கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சியினரும் இந்த கோரிக்கையை வலுவாக முன்னெடுக்க மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி – சீமான் – விஜய் என முதலமைச்சர் நாற்காலிக்கான போட்டி வலுவாக இருப்பதால் இதில் கூட்டணி கட்சிகளே முதலமைச்சரை தீர்மானிப்பதில் முக்கிய சக்தியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதன் காரணமாக அரசியலுக்கு புதுமுகமான விஜய், ஆளுங்கட்சியான திமுக-வின் பலமான கூட்டணியை உடைக்க தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறார். காங்கிரஸ், திருமாவை தன் பக்கம் இழுக்க அவர் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற குரலை முன்னெடுத்து வருவது திமுக-விற்கு தலைவலியாக மாறியுள்ளது. மேலும், தற்போது வரை எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் விஜய்யின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருவது ஆளுங்கட்சிக்கு பின்னடைவை உண்டாக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களில் கூட்டணி கணக்கு மிகப்பெரிய அளவு மாறலாம் என்று கருதப்படுகிறது.














