தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தவெக-விற்கு கரூர் சம்பவம் மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கியுள்ளது.
கரூர் துயரம்:
கரூரில் விஜய்யைப் பார்ப்பதற்காகவும், விஜய்யின் பரப்புரையில் பங்கேற்பதற்காகவும் சென்ற 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு உயிர்களும் பறிபோகியுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் ஆதரவு அலையில் மிதந்து வந்த விஜய்யின் அரசியல் பயணத்தில் மிகப்பெரிய கரும்புள்ளியாக இது மாறியுள்ளது.
இந்த துயர சம்பவத்திற்கு பிறகு தவெக நிர்வாகிகளும், தவெக தலைமையும் நடந்து கொண்ட விதம் பல தரப்பினருக்கும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு 3 நாட்கள் கழித்தே நடிகர் விஜய் தனது வேதனையை வீடியோவாக வெளியிட்டார். அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கச் செல்லாத நிலையில், புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல்குமார் தலைமறைவாகவே உள்ளனர்.
பாஜக-விற்கு பணிந்தாரா விஜய்?
கரூர் மாவட்ட தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் இருந்து ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருப்பதாகவும் தகவல் வெளியாகவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை தவெக நிர்வாகிகள் சந்திக்க வராத சூழலில், கரூர் மாவட்ட தவெக-வே மிகவும் மரண அமைதியாக இருப்பது அந்த கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கையை குறைத்துள்ளது.
இந்த சூழலில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றுள்ளார். பாஜக தான் தனது கொள்கை எதிரி என்று கூறிய விஜய் தற்போது பாஜக-விற்கு அடிபணிகிறாரா? என்ற கேள்வியை இந்த டெல்லி பயணம் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. கரூர் துயர சம்பவத்தில் விஜய்க்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் அதிமுக – பாஜக கூட்டணி கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு மறைமுக காரணம் கூட்டணிக்கான அழைப்பே ஆகும்.
என்ன செய்வார் தளபதி?
விஜய் வெளியிட்ட வீடியோவிலும் தனக்கு ஆறுதல் கூறிய அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறியிருந்தார். இந்த சூழலில், ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றிருப்பது கூட்டணி வலையில் விஜய் வீழ்ந்துவிட்டார் என்பதையே உணர்த்துவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். டெல்லியில் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்திக்கவே ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொள்கை எதிரி என்று தொடர்ந்து கூறிய விஜய் பாஜக-வுடன் கரம் கோர்த்தால் தனது முதல் தேர்தலிலே அவருடைய மிகப்பெரிய பலமாக உள்ள முதல் தலைமுறை வாக்குகளையே அவர் இழக்கும் அபாயம் உண்டாகும் என்பதும் அரசியல் நிபுணர்களின் எச்சரிக்கை. அடுத்தடுத்த நாட்களில் விஜய் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்ன செய்யப்போகிறார்? என்பதைப் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் உள்ளது.














