டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணி தேர்விற்கு வரவேற்பும், எதிர்ப்பும் என கலவையான விமர்சனங்கள் உருவாகியுள்ளது. ஐ.பி.எல். தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பலருக்கும் இந்த தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ்ட் வீரர்கள் பட்டியலில் ரிங்குசிங்:
தற்போதைய இந்திய அணியில் ஃபினிஷிங் ரோலில் அசத்தி வரும் ரிங்கு சிங் முக்கிய அணியில் இல்லாமல் ரிசர்வ்ட் வீரர்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக முறையாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனுபவ வீரர்களான ரோகித், விராட், ஜடேஜா, பும்ரா, பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் ஜெய்ஸ்வால், ஷிவம் துபே போன்ற வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அணி தேர்வு விவரம் வெளியான அன்றே இந்திய அணிக்கு தேர்வாகிய மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த ரோகித், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா சொதப்பலாக ஆடினர்.
சுப்மன் கில்லும் ரிசர்வ்ட் வீரர்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ரிங்கு சிங் ரிசர்வ்ட் வீரர்கள் பட்டியலில் வைக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிறந்த ஃபினிஷர்:
ரிங்கு சிங் இதுவரை சர்வதேச அளவில் 15 டி20 போட்டிகளில் ஆடி 176 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 356 ரன்களை எடுத்துள்ளார். அதில் 2 அரைசதங்கள் அடங்கும். மொத்தமாக 120 டி20 போட்டிகளில் ஆடி 15 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 503 ரன்கள் விளாசியுள்ளார்.
இதுபோன்ற சிறந்த அதிரடியான வீரரை, சிறந்த ஃபினிஷரை ரிசர்வ்ட் வீரர்கள் பட்டியலுக்கு அனுப்பியது தேர்வுக்குழுவின் தவறான முடிவாகவே பார்க்கப்படுகிறது. வாய்ப்பு வழங்கப்படவில்லை, வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றே வாய்ப்பு பெற்றுள்ள சாம்சன் 25 டி20 போட்டிகளில் இதுவரை 374 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 133.1 ஆகும். ஷிவம் துபே இதுவரை 21 டி20 போட்டிகளில் ஆடி 145 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே வைத்துள்ளார். 3 அரைசதங்கள் எடுத்துள்ளார்.
வெளிநாட்டு மண்ணில் நடைபெற உள்ள இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.














