ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அணிகளில் ஆர்.சி.பி. தவிர்க்க முடியாத அணியாகும். இந்த தொடரில் மிக மோசமான பந்துவீச்சு காரணமாக அவர்கள் முதல் பாதியில் தொடர் தோல்விகளை சந்தித்தனர். குறிப்பாக, சன்ரைசர்ஸ் அணி ஆர்.சி.பி.க்கு எதிராக 287 ரன்கள் குவித்தபோது, பெங்களூர் பந்துவீச்சு எந்தளவு மட்டமாக இருக்கிறது என்பதை அந்த போட்டி காட்டியது.
மீண்டு வரும் ஆர்.சி.பி.
அதேபோட்டியில், இலக்கை நோக்கி துரத்திய ஆர்.சி.பி. 262 ரன்கள் குவித்தபோது அவர்களது போராட்ட குணத்தை அனைவரும் பாராட்டினர். அதற்கு அடுத்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்.சி.பி., சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகவே தனது வெற்றியைத் தொடங்கியது. அந்த போட்டியில் ஆர்.சி.பி, வெற்றி மட்டும் பெறவில்லை. இந்த தொடரில் மிகுந்த ஆதிக்கம் நிறைந்த அணியாக உலா வந்த சன்ரைசர்ஸின் பலவீனத்தை மற்ற அணிகளுக்கு படம்போட்டு காட்டியது.
சேசிங் மற்றும் சுழற்பந்துவீச்சில் அவர்கள் தடுமாறுவார்கள் என்பதை ஆர்.சி.பி. உணர்த்த, நேற்று சி.எஸ்.கே. சன்ரைசர்சை சுருட்டி வீசியது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் குஜராத் அணி நிர்ணயித்த 201 ரன்கள் இலக்கை ஆர்.சி.பி. அணி 16 ஓவர்களிலே எட்டிப்பிடித்தது. வில் ஜேக்ஸ் என்ற புதிய சகாப்தம் நேற்று ஆர்.சி.பி. அணிக்காக உதயமானது.
இந்த தொடரில் முதல் சில போட்டிகளில் அவர் களமிறக்கப்படாமல் பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டதற்கு, கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் அணியில் சேர்க்கப்பட்டார். முதல் ஓரிரு போட்டிகளில் அவரது அதிரடியை காண முடியாதவர்களுக்கு ஒரு அரைசதம் விளாசி எச்சரிக்கை செய்தார்.
வில் ஜேக்ஸ் எனும் வீரன்:
நேற்றைய போட்டியில் வில் ஜேக்ஸ் எனும் வீரன் என்பதை நிரூபித்துவிட்டார். ஏபி டிவிலியர்ஸின் அதிரடியை போல வில் ஜேக்ஸின் ஆட்டம் நேற்று இருந்தது. 25 பந்துகளில் 37 ரன்கள் இருந்த வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் 100 ரன்களுக்கு சென்றுவிட்டார். குறிப்பாக, உலகத் தரம் வாய்ந்த ரஷீத்கான் பந்திலே சிக்ஸராக விளாசி அனைவரையும் வாயைப் பிளக்க வைத்தார்.
அவரது அதிரடியை கண்ட ரசிகர்கள் பலரும் இவரை ஏன் தொடக்கம் முதலே பயன்படுத்தவில்லை? என்று ஆதங்கத்துடன் கேட்டு வருகின்றனர். கண்டா வரச் சொல்லுங்க என்று வில் ஜேக்ஸிற்கு மீம்ஸ்கள் போட்டது மிகச்சரியானதே என்பதையும் வில் ஜேக்ஸ் தனது அதிரடியால் நிரூபித்துள்ளார். நேற்றைய போட்டியில் மட்டும் வெறும் 5 பவுண்டரிகள் மட்டுமே அடித்த ஜேக்ஸ் 10 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அடுத்தடுத்த போட்டிகளில் வில் ஜேக்ஸ் ஆர்.சி.பி.க்கு பக்கபலமாக இருப்பார் என்று கருதப்படுகிறது.














