ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரின் மிக முக்கிய மோதலாக கருதப்படும் மும்பை – சென்னை அணிகள் இன்று மோதுகின்றன. ரோகித் – தோனி என்றே பல ஆண்டுகளாக இருந்து வந்த மும்பை – சென்னை இந்த முறை ஹர்திக் – ருதுராஜ் என்ற புதிய கேப்டன்களின் தலைமையில் களமிறங்குகிறது.
மும்பை – சென்னை மோதல்:
இந்த தொடர் தொடங்கியபோது, ஹாட்ரிக் தோல்வியுடன் ஆட்டத்தை தொடங்கிய மும்பை அணி அடுத்தடுத்து வெற்றி பெற்று அசுர பலத்துடன் உள்ளது. குறிப்பாக, பழைய மும்பை அணியை போல பேட்டிங்கில் அவர்கள் மீண்டு வந்திருப்பது அவர்களுக்கு பலமாக உள்ளது. கடந்த போட்டியில் ஆர்.சி.பி. அணி நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை வெறும் 16 ஓவர்களில் எட்டிப்பிடித்து அசத்தியிருந்தனர்.
சென்னை அணி இந்த தொடர் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சென்னை அணியை பொறுத்தவரையில் ருதுராஜ் – ரவீந்திரா நல்ல தொடக்கத்தை அளிக்கின்றனர். மிடில் ஆர்டரில் ரஹானே, ஷிவம் துபே, ஜடேஜா பலமாக உள்ளனர். தோனி பெரும்பாலும் பேட்டிங் செய்வதை தவிர்த்து வருகிறார். இருப்பினும், டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் காட்டிய அதிரடி தோனி இன்னும் அதே ஃபார்மில் இருப்பதை உணர்த்துகிறது.
வெல்லப் போவது யார்?
பந்துவீச்சை பொறுத்தவரை இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதாகவே கருதப்படுகிறது. மும்பை அணியில் பெரும் பலமாக பும்ரா உள்ளார். இந்த சீசன் தொடங்கியது முதலே அசத்தலாக வீசி வருகிறார். அவருக்கு கோட்ஸி, மத்வால் ஒத்துழைப்பு தருகின்றனர். பியூஷ் சாவ்லா சுழலில் அசத்துகிறார்.
சென்னை அணியில் முஸ்தபிசூர் ரஹ்மான், தீக்ஷனா, தேஷ்பாண்டே முக்கிய வீரர்களாக உள்ளனர். மும்பை பேட்டிங்கை பொறுத்தவரை ரோகித் – இஷான் மிரட்டலான தொடக்கமாக உள்ளனர். அடுத்து வரும் சூர்யகுமார் யாதவும் அதிரடியில் அசத்துகிறார். டிம் டேவிட், ஷெப்பர்ட், ஹர்திக் பாண்ட்யா என அனைவரும் தொடர்ந்து அசத்தி வருகின்றனர்.
இன்றைய போட்டியில் பரம வைரிகளாக கருதப்படும் மும்பை – சென்னை மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.














