இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஹைதரபாத் மைதானத்தில் இந்தியாவுடன் முதல் டெஸ்டில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 240 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுருண்டது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஜடேஜா, அக்ஷர் படேல், கே.எஸ்.பரத் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் 436 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது.
தடுமாறிய இங்கிலாந்து:
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி இங்கிலாந்தை நிலைகுலைய வைக்கலாம் என்ற எண்ணத்தில் மைதானத்தில் களமிறங்கியது. ஆனால், இந்திய அணிக்கு தனி ஆளாக அந்த அணியின் ஒல்லி போப் தண்ணி காட்டி வருகிறார். ஜாக் கிராவ்லி 31 ரன்களிலும், டக்கெட் 47 ரன்களிலும் அவுட்டாக முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 2 ரன்களில் அவுட்டாக ஜானி பார்ஸ்வோ 10 ரன்களுக்கும், கேப்டன் ஸ்டோக்ஸ் 6 ரன்களுக்கும் அவுட்டானார்கள்.
தாங்கிப் பிடித்த ஒல்லி போப்:
163 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை பென் போக்சை மறுமுனையில் வைத்துக்கொண்டு தனி ஆளாக அணியை தேற்றினார் ஒல்லி போப். அணி 275 ரன்களை எட்டியபோது பென் போக்ஸ் 34 ரன்களில் அவுட்டாக, மறுமுனையில் அபாரமாக ஆடிய ஒல்லி போப் சதம் அடித்தார். இந்த தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். அதன்பின்பும், ரெஹன் அகமதுவை வைத்துக்கொண்டு அபாரமாக ஆடினார்.
ரெஹன் அகமது 28 ரன்களில் அவுட்டாக. அடுத்து வந்த டாம் ஹார்ட்லியை வைத்து இந்திய அணிக்கு தண்ணி காட்டி வருகிறார். 4வது நாள் ஆட்டம் இன்று நடந்து வரும் நிலையில், ஒல்லி போப் 255 பந்துகளில் 19 பவுண்டரியுடன் 179 ரன்களுடன் பேட்டிங் செய்து வருகிறார். இங்கிலாந்து அணி தற்போதே 200 ரன்கள் முன்னிலை பெற்று விட்டது.
போராடும் இந்தியா:
இங்கிலாந்து அணி இந்த போட்டியில் 250 ரன்களுக்கு மேல் இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கக்கூடும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. 26 வயதான ஒல்லி போப் 39 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதம், 1 இரட்டை சதம், 11 அரைசதம் உள்பட 2 ஆயிரத்து 317 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒல்லி போப்பை அவுட்டாக்க இந்திய பந்துவீச்சாளர்கள் போராடி வருகின்றனர்.














