உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்த 4 நாட்களுக்குள் தொடங்கியது இந்தியா – ஆஸ்திரேலியா டி20 தொடர். உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆடிய 2 அணிகளுமே நேருக்கு நேர் களமிறங்கியதால் இந்த தொடரில் பரபரப்பு ஏற்பட்டது.
2வது மோதல்
விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை இந்தியா ஒரு பந்து மீதம் வைத்து எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது.
உலகக்கோப்பையில் பயிற்சி ஆட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டு, அதுவும் மழையால் கைவிடப்பட்ட திருவனந்தபுரம் மைதானத்தில் இன்றைய போட்டி நடக்கிறது.
கடந்த போட்டியில் இந்திய அணியை குறைவாக எடை போட்டிருப்பதை ஆஸ்திரேலிய அணி உணர்ந்திருக்கும். இதனால், இன்றைய போட்டியில் கவனத்துடன் ஆடுவார்கள்.
அந்த அணிக்கு பலமாக இங்கிலிஷ் உள்ளார். அவர் கடந்த போட்டியில் அபார சதம் அடித்தார். அதேபோல, கேப்டன் வேட், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் அதிரடி காட்டக்கூடியவர்கள். இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நல்ல ஃபார்மில் உள்ளார்.
தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், ருதுராஜ் அசத்தினால் அபாரமாக இருக்கும். இஷன் கிஷன், திலக் வர்மா சிறப்பாக ஆடினால் இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும். இந்திய அணியின் பின்வரிசையில் ரிங்கு சிங் பெரும் பலமாக உள்ளார்.
பந்துவீச்சு பலவீனம்:
இரு அணிகளிலும் பந்துவீச்சு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீச வேண்டியது கட்டாயம் ஆகும். முகேஷ்குமார் கடந்த போட்டியில் கடைசி ஓவர் சிறப்பாக வீசினார். இன்றைய போட்டியிலும் சிறப்பாக வீச வேண்டியது கட்டாயம் ஆகும். ஆஸ்திரேலிய அணியில் அப்பாட், எல்லீஸ், பெஹரண்டோர்ப், சங்கா, அனுபவ வீரர் ஸ்டோய்னிஸ் பந்துவீச்சை கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் விளாசினர்.
இதனால், இரு அணியினரும் இன்று பந்துவீச்சை பலப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் சினி பிளக்ஸ், ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.














