தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அனுமதி வழங்கினால் பனை தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
விவசாயிகள் கோரிக்கை:
இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு கள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும், தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளருமான செ.நல்லசாமி நிருபர்களைச் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில், விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்று விவசாயிகளுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும், அதுவே அவர்களின் வருவாயை இரட்டிப்பாக்கும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல, காவிரி நதிநீர் விவகாரத்தில் தினந்தோறும் நதிநீர்ப் பங்கீடு முறையை அமல்படுத்த வேண்டும், ஜவ்வரிசி ஆலைகளில் நடைபெறும் கலப்படம், ரசாயன சேர்க்கையை தடுத்து நிறுத்த வேண்டும், நெல்லின் குறைந்த பட்ச ஆதார விலையை கூட்டி அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கள் இறக்கும் போராட்டம்:
மேலும், பத்ம விருது வழங்கல் ஒதுக்கீட்டில் 50 சதவீதம் விவசாயத்துறைக்கு வழங்க வேண்டும் என்றும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும வகையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கும் வகையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக கள் மீதான தடையை நீக்காவிட்டால் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடையும் என்றும் எச்சரித்தனர். இதுதவிர கள் தடை நியாயமானது என நிரூபிப்பவருக்கு 10 கோடி ரூபாய் பரிசு எனவும் அறிவித்துள்ளனர்.














