இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பைத் தொடர் நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத உலகக்கோப்பையாக உருவெடுத்து வருகிறது. அதற்கு காரணம் இத்தனை ஆண்டுகளாக குட்டி அணிகள் என்று ஓரங்கட்டப்பட்டு, குறைவாக எண்ணப்பட்டு வந்த கிரிக்கெட் அணிகள் ஜாம்பவான் அணிகளை புரட்டி எடுத்து வருகின்றன.
தொடரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும்:
நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் வெறும் 10 அணிகள் மட்டுமே பங்கேற்று ஆடி வருகின்றன. அதில் தரவரிசையில் உள்ள முதல் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், இலங்கை – நெதர்லாந்து அணிகள் தகுதிச்சுற்று மூலம் உலகக் கோப்பைத் தொடருக்குள் நுழைந்தன.
இந்த தொடரில் சிறிய அணிகளாக அதாவது இவர்களெல்லாம் கோப்பையை வெல்ல வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட அணிகளாக வங்கதேசம், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பில் முன்னணியில் இருக்கிறது. ரசிகர்களும் அவ்வாறே நினைத்து வருகிறோம். இவர்கள் எல்லாம் கோப்பையை வெல்ல வாய்ப்பு இல்லாவிட்டாலும், சாம்பியன் அணிகளுக்கு அதிர்ச்சி தர தகுதியான அணிகள் என்பதையே அனைவரும் மறந்துவிட்டோம் என்பதை கடந்த சில ஆட்டங்கள் காட்டுகிறது.
பாடம் எடுத்த நெதர்லாந்து:
டெல்லியில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வாரி, சுருட்டி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைத்தது. ஆப்கானிஸ்தான் தந்த அதிர்ச்சியே முன்னாள் சாம்பியன்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த உலகக்கோப்பையில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசுரபலம் கொண்ட அணியாக உள்ளே வந்த தென்னாப்பிரிக்காவை நேற்று நெதர்லாந்து அணி சிதைத்தது என்றே சொல்லலாம்.
82 ரன்னுக்கு 5 விக்கெட் என்று தடுமாறிக் கொண்டிருந்த நெதர்லாந்து அணியை அந்த அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் மிகவும் பொறுப்புடன் ஆடி 78 ரன்கள் விளாசி 245 ரன்களை எட்ட வைத்தார். 50 ஓவர்களில் 400 ரன்களை விளாசும் தென்னாப்பிரிக்கா அணி 43 ஓவர்களில் 246 ரன்களை எட்டிவிடும் என்று எண்ணிய ரசிகர்களுக்கு நெதர்லாந்து பாடம் எடுத்தது என்றே சொல்லாம்.
கற்றுக் கொடுக்கும் அணிகள்:
பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் மிகவும் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதத்தில் 207 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை ஆல் அவுட்டாக்கி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர். இந்த வெற்றி நெதர்லாந்து அணியை ஒரு ஆபத்தான அணி என்பதை மற்ற அணிகளுக்கு உணர்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளின் வெற்றி அவர்கள் கத்துக்குட்டி அணிகள் அல்ல, கற்றுக்கொடுக்கும் அணிகள் என்பதை சாம்பியன் என்ற ஆணவத்துடன் உலா வரும் அணிகளின் ஆழ்மனதில் பதிய வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
லேசா எடை போடலாமா?
இந்த தொடரில் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் அணி வங்கதேச அணியாகும். வங்கதேச அணி அடுத்ததாக இந்தியாவுடன் விளையாட உள்ளது. 2007 உலகக்கோப்பையில் இந்தியாவை ஏற்கனவே வீழ்த்திய அனுபவம் வங்கதேசத்திற்கு உண்டு. அந்த தோல்விக்கு பின்பே இந்திய அணி மறுகட்டமைப்பு செய்யப்பட்டது என்று கூட சொல்லலாம்.
ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளின் வெற்றி இந்திய அணி வங்கதேசம் அணியை லேசாக எடை போட்டுவிடக்கூடாது என்பதையே காட்டுகிறது. மேலும், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, அயர்லாந்து, நேபாளம், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே போன்ற வளர்ந்து வரும் அணிகளுடன் பெரிய அணிகள் அடிக்கடி கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர்களது கிரிக்கெட் வளர உத்வேகம் தர வேண்டும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.













