மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கும் என்று ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் இன்று காலை முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு:
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு நேற்று மாலை முதலே தமிழ்நாடு முழுவதும் போலீசாருடன் துணை ராணுவமும் இணைந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் காலை 7 மணி முதல் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிற அரசியல் கட்சி தலைவர்களான வைகோ, ராமதாஸ், திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்டோர் அவரவர் தொகுதியில் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
ஆர்வமுடன் வாக்களிப்பு:
திரை பிரபலங்களான ரஜினிகாந்த், அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் காலையிலே சென்று வாக்கு செலுத்தி விட்டனர். தொடர்ந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில், 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.













