தமிழ்நாட்டில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும் மகாதீபம் ஏற்றப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
ஈஷா:
இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருநாளான இன்று ஒட்டுமொத்த ஈஷாவும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளியால் பிரகாசித்தது. ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, சூரிய குண்டம், நந்தி, ஆதியோகி உள்ளிட்ட இடங்களில் ஈஷா தன்னார்வலர்களும், பொதுமக்களும் அகல் விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும், சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தியானலிங்கம் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்ட 24-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு நாத ஆராதனையும் நடைபெற்றது.
லிங்கபைரவி சந்நிதியில் பெளர்ணமி அபிஷேகமும், அதை தொடர்ந்து நந்தி முன்பு லிங்கபைரவி மஹா ஆரத்தியும் நடைபெற்றது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றதால், பக்தர்கள் திரளாக சென்று பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.














