மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வந்துள்ளார். அவரை இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.
நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்?
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிவு ஏற்பட்ட நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நிருபர்களைச் சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது, “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சென்ற மாதம் ஏற்கனவே டெல்லியில் சந்தித்து, தென்னை விவசாயிகள் சார்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தோம். அந்த மனு குறித்து வலியுறுத்துவதற்காக நானும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி, தென்னிந்திய தென்னை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சக்திவேல் ஆகியோர் இன்று மத்திய நிதியமைச்சரை சந்தித்தோம்.
தென்னை விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக எங்களது மனுவை மீண்டும் கொடுத்தோம். இந்தச் சந்திப்புக்கு வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது. தென்னை நார் தொழிற்சாலைகள் நசிந்துபோய் கிடக்கின்றன. விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல், தேங்காய் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். இது தொடர்பாக மாநில அரசிடம் பலமுறை கடிதம் வழியாகவும், நேரடியாகவும் தெரிவித்தோம். ஆனால், மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தென்னை விவசாயிகள் கோரிக்கை தொடர்பாகத்தான் மத்திய அமைச்சரை சந்தித்தோம்.
கூட்டணி பேச்சா?
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து எல்லாம் பேசவில்லை. நாங்கள் வந்ததற்கு காரணம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, ஆனைமலை, உள்ளிட்ட எங்களுடைய பகுதி தென்னை விவசாயம் சார்ந்த பகுதி. எனவே, மத்திய அரசின் உதவியை கோரி மத்திய அமைச்சரை சந்தித்தோம். இங்கு நடந்த விழாவிலும் இதைத்தான் நான் பேசினேன். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார். அதற்காக நான் இங்கு வரவில்லை. ஒரு தொகுதி எம்எல்ஏ என்ற அடிப்படையில், மக்களின் பிரதான பிரச்சினை இது. எனவே, அவர்களுடைய கோரிக்கையை தெரிவிப்பதற்காக வந்தோம்”.
இவ்வாறு அவர் கூறினார்.














