தமிழக அரசியலுக்கும், தமிழ் சினிமாவிற்கும் இடையேயான உறவு மிகவும் இணக்கமானது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தமிழ்நாட்டையே வலுவாக கட்டமைத்த முதலமைச்சர்களுக்கும் சினிமாவிற்குமான உறவு நாம் அறிந்ததே ஆகும்.
விஜய்யின் அரசியல் தெளிவு:
இந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டின் அரசியல் அரியாசனத்தை அலங்கரிக்க முயற்சிக்கிறார் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அவரின் கடந்த கால செயல்பாடுகள் அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை ஆழமாக உறுதிப்படுத்தி வந்த நிலையில், லியோ பட வெற்றி விழாவில் நேற்று அவரது பேச்சு அவர் அரசியலின் அடிப்படையை எந்தளவு புரிந்து வைத்துள்ளார் என்பதை உணர்த்துகிறது.
விஜய்யின் தொடக்க காலத்தில் அவரது போட்டியாளராக அஜித் காணப்பட்டார். பின்னர், சமீபகாலமாக ரஜினிகாந்துடன் விஜய்யின் போட்டி என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த சூழலில், லியா பட வெற்றி விழாவில் நேற்று விஜய் பேசியதுதான் தற்போது தமிழ்நாட்டு அரசியலிலும், தமிழக மக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
எத்தனை பெரிய நடிகராக இருந்தாலும் தான் வெற்றி பெற ரசிகர்களை மட்டும் நம்பி களத்தில் இறங்க முடியாது என்பதை விஜய் நன்றாக உணர்ந்துள்ளார் என்பதை அவரது பேச்சு நேற்று உணர்த்தியுள்ளது.
ரஜினி, கமல், அஜித் ரசிகர்கள் வாக்கு:
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் சொன்ன கழுகு – காகா கதைக்கு பிறகு, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனால், லியோ பட வெற்றி விழாவில் ரஜினிகாந்தை விமர்சித்து விஜய் பேசுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், விஜய்யோ ஒரே ஒரு புரட்சித்திலகம், ஒரே ஒரு நடிகர் திலகம், ஒரே ஒரு புரட்சிக்கலைஞர், ஒரே ஒரு உலக நாயகன், ஒரே ஒரு சூப்பர்ஸ்டார், ஒரே ஒரு தல என யாருமே எதிர்பாராத வகையில் பேசி அனைத்து ரசிகர்களின் அன்பையும் பெற முயற்சித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் ஏன் இத்தனை கோபம் என தன் ரசிகர்களுக்கு அறிவுரையாகவும் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தனக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும், தேர்தலில் வாக்களிக்க அவர்கள் மட்டுமே போதாது என்பதை தெளிவுடன் உணர்ந்திருப்பதையே அவரது இந்த பக்குவப்பட்ட பேச்சு காட்டுகிறது. மேலும், தன்னைப் போலவே கோடிக்கணக்கான ரசிகர்களை தற்போது கொண்டுள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அஜித் ரசிகர்களின் வாக்குகளும் மிகவும் முக்கியம் என்பதை அவர் எந்தளவு உணர்ந்துள்ளார் என்பதையும் அவரது பேச்சு காட்டுகிறது.
அஜித் ரசிகர்களின் ஆதரவு:
60, 70 வயதில் உள்ள பலரும் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களை இன்றளவும் ரசிக்கிறார்கள். குறிப்பாக, எம்.ஜி.ஆருக்கு தற்போதும் ரசிகர்கள் உள்ளனர். விஜயகாந்த் வெளியில் அவ்வளவாக வராவிட்டாலும் அவருக்கான செல்வாக்கு என்பது தற்போது வரை துளியளவு வரை குறையவில்லை. இன்றும் அவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களும், தொண்டர்களும் உள்ளனர்.
ரஜினிகாந்த் மீண்டும் தற்போது கம்பேக் வெற்றி தந்திருப்பதாலும் அவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதாலும் அவர்களின் ஆதரவு மிகவும் நிச்சயம் என்பதையும் விஜய் உணர்ந்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு அரசியல் கட்சித் தலைவராகவும் இருப்பதால் அவரது ரசிகர்களின் வாக்குகள் விஜய்க்கு நிச்சயம் தேவையாகும்.
இவர்கள் எல்லாம் விஜய்க்கு மூத்தவர்கள் என்றாலும் விஜய்யின் சமகால நடிகராக இருந்து அவருக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை தற்போது தமிழ்நாட்டில் கொண்டுள்ள ஒரே நடிகர் அஜித்குமார். அஜித்குமாரின் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு நடிகர் விஜய்க்கு மிக மிக முக்கியமானது ஆகும்.
மாஸ்டர் ப்ளான் கை கொடுக்குமா?
மக்களாக அனைவரையும் தன் பக்கம் ஒன்று திரட்டும் முன்பு, திரை வட்டாரத்தில் அனைத்து முன்னணி நடிகர்களின் ரசிகர்களையும் தன்பக்கம் திரட்ட வேண்டும் என்ற விஜய்யின் இந்த மாஸ்டர் ப்ளான் நிச்சயம் மிகச்சிறந்த அரசியல் நகர்வு என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், விஜய் குறிப்பிட்ட நடிகர்களில் ரஜினிகாந்தோ, கமல்ஹாசனோ, அஜித்தோ நேரடியாக விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு ஆகும்.
அதே நேரத்தில் அவர்களது பெயர்களை பெரியளவில் பயன்படுத்தாமல், அதேசமயம் அவர்களது ரசிகர்களையும் தனக்கு ஆதரவாக மாற்றும் பணியை நடிகர் விஜய் நேற்று செய்துள்ளார்.
2026ல் கப் முக்கியம் பிகிலு என்று விஜய் நேற்று சொன்னதைத் தொடர்ந்து, அவரது அரசியல் வருகை ஆணித்தரமாக உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் நேற்று போட்ட மாஸ்டர் ப்ளான் அவருக்கு கை கொடுக்குமா? என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.














