அனைத்திற்கும் ஆதியாக கருதப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் மிக மிக முக்கியமானது சிவராத்திரி. இந்த நன்னாளை ஆண்டுதோறும் சிவ பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.
சிவராத்திரி எப்போது?
மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதியே மகாசிவராத்திரியாக கொண்டாப்படுகிறது. இதன்படி, நடப்பாண்டிற்கான சதுர்த்தசி திதி வரும் 26ம் தேதி பிறக்கிறது. பொதுவாக ஒருநாளில் சூரிய உதயத்தின்போது எந்த திதி உள்ளதோ, அதுவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி, பார்த்தால் பிப்ரவரி 27ம் தேதி சூரிய உதயத்தின்போதுதான் சதுர்த்தசி திதி இருக்கும். ஆனால், சிவராத்திரி என்பது பக்தர்கள் இரவில் கண்விழித்து ஈசனை வணங்க வேண்டிய நாள் என்பதால் பிப்ரவரி 26ம் தேதியே நடப்பாண்டிற்கான சிவராத்திரி ஆகும்.
கண்விழிக்க வேண்டியது எப்போது?
பிப்ரவரி 26ம் தேதி இரவுதான் கண்விழித்து சிவபெருமானை வணங்க வேண்டும். அந்த நன்னாளில் சிவபெருமானை கண்விழித்து வணங்கினால் பாவங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம் ஆகும்.
சதுர்த்தசி திதி பிறக்கும் 26ம் தேதி இரவுதான் கண்விழித்து சிவபெருமானை வணங்க வேண்டும். அந்த நாளில் கோயிலில் நடக்கும் நான்கு கால பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வது சிறப்பு ஆகும்.
சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவன் கோயில்களும் பூஜைக்குத் தயாராகி வருகின்றன.














