இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித்சர்மா, விராட் கோலிக்கு வயதாகிவிட்டதால் அடுத்த தலைமுறைக்கான இந்திய அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள அணியில் இளம் வீரர்கள் இருந்தாலும் இன்னும் இளம் வீரர்களை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஜொலிக்கும் முஷீர்கான்
இந்திய அணி தொடர்ந்து மூன்று வடிவிலான போட்டிகளிலும் ஆடி வருகிறது. இதனால், தற்போது நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை தொடர் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் தொடங்கியது முதலே இந்திய அணி வீரர்களின் செயல்பாடு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
பல வீரர்கள் மீது மிகுந்த கவனம் இருந்தாலும், முஷீர்கான் மீது தொடக்கம் முதலே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் மகாராஷ்ட்ரா பிரிமியர் லீக்கில் 18 வயதே ஆன முஷீர்கான் சிக்ஸர்களை சரமாரியாக விளாசியதே ஆகும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அயர்லாந்து அணிக்கு எதிராக சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசி அபார சதம் விளாசினார்.
எதிர்கால நட்சத்திரம்:
இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். இந்திய அணியின் ஆதர்ஷ் சிங் அபார அரைசதம் விளாசிய நிலையில், அவருக்கு துணையாக மறுமுனையில் ஆடிய முஷீர்கான் கேப்டன் உதய் சாஹரன் துணையுடன் அபாரமாக ஆடினார். உதய் 34 ரன்களில் அவுட்டாக முஷீர்கான் பவுண்டரியையும், சிக்ஸரையும் விளாசி சதம் அடித்தார். அவரது அபார சதத்தால் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 295 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி சௌமி பாண்டே சுழலில் சிக்கி 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷீர்கான் மற்றொரு வளர்ந்து வரும் இந்திய வீரரான சர்ப்ராஸ் கானின் தம்பி ஆவார். அடுத்த ஐ.பி.எல். தொடரில் முஷீர்கான் முக்கிய வீரராக திகழ்வார் என்று எதிர்பார்க்கலாம். அவரது அபாரமான பேட்டிங் திறமையும், சிக்ஸர் அடிக்கும் வல்லமையும் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நல்ல பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் நல்ல சுழற்பந்துவீச்சாளராகவும் அசத்துகிறார். தனது 8 வயதிலே இந்தியாவின் நட்சத்திர ஆல் ரவுண்டர் யுவராஜ்சிங்கை அவுட்டாக்கியவர். அப்போதே அதன்மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இந்தியாவின் வருங்கால கிரிக்கெட் நட்சத்திரமாக முஷீர்கான் ஜொலிப்பார் என்று கருதலாம்.














