தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்காக தமிழக அரசும், திரைப்பட சங்கமும் இணைந்து நடத்திய கலைஞர் 100 விழா எதிர்பார்த்த வெற்றியை பெறாதது தி.மு.க. அரசுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. குறிப்பாக, அன்றைய தினத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த நிலையில் 1000 பேர் அளவிற்கு கூட மக்கள் வராதது பெரும் அதிருப்தியை தி.மு.க.வினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
விஜய் புறக்கணிப்பு
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் பங்கேற்றும் விழாவில் பங்கேற்ற பொதுமக்களில் பலரும் விஜய் மற்றும் அஜித்தை பார்க்கவே வந்தோம் என்று கூறியது மற்ற பிரபலங்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் பட விழாவிலே பங்கேற்காத அஜித் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது புதியதாக யாருக்கும் தெரியவில்லை. ஆனால், சமீபகாலமாக அரசியல் ஆட்டத்தில் தனது பணிகளை தீவிரப்படுத்தி வரும் விஜய் இந்த விழாவை புறக்கணித்தது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் கருணாநிதிக்கு சிலை அமைத்து, அதை அவருடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என்று கூறிய விஜய் கலைஞர் 100 விழாவை புறக்கணித்தது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. ஏற்கனவே சமூக வலைதளங்களில் எதிர்காலத்தில் உதய்க்கும், விஜய்க்குமே போட்டி அமையும் என்று கருத்துக்கள் பரவி வரும் நிலையில் தற்போது நேரடியாக விஜய் தி.மு.க.வை எதிர்க்கும் விதமாக கலைஞர் 100 விழாவை புறக்கணித்துள்ளார்.
அரசியல் ஆட்டம் ஆரம்பமா?
விஜய்யின் இந்த புறக்கணிப்பு நிச்சயம் அவரது தி.மு.க. எதிர்ப்பை காட்டுவதாகவே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து நற்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் மக்களவைத் தேர்தலில் விஜய்யின் உத்தரவிற்காக காத்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதமே உள்ள நிலையில், அடுத்த சட்டசபைத் தேர்தலை நோக்கி விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக விஜய் தி.மு.க. அரசை புறக்கணிக்கும் விதமாக பல நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.














