தமிழ்நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இயங்கி வரும் அமைப்பு தமிழ்நாடு டிராவல் மார்ட் சொசெட்டி ஆகும். கடந்த 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்திற்கு தற்போது புதிய தலைவரும், நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு டிராவல் மார்ட்:
2023 -2026ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு இந்த நிர்வாக குழு செயல்படும். இதன்படி, புதிய நிர்வாக குழுவின்படி தமிழ்நாடு டிராவல் மார்ட் சொசைட்டியின் தலைவராக டாக்டர்.பி.முருகேசன் தேர்வாகியுள்ளார். துணைத் தலைவராக சாப்ரு மேத்யூ, குமார், பாண்டியன், ஜான்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முசாபர் அகமது செயலாளராகவும், யாமினி கிருஷ்ணன் துணைச் செயலாளராகவும், பூர்ணா தீபிகா பொருளாளராகவும் தேர்வாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் நிருபர்களைச் சந்தித்தனர் அப்போது, தமிழ்நாடு புதிய சுற்றுலா கொள்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர்.
டிராவல் மார்ட் மாநாடு:
மேலும், சுற்றுலா கொள்கையின்படி 20 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு டிராவல் மார்ட் சங்கத்தினர் சார்பில் இந்தாண்டு இறுதியிலோ அல்லது வரும் 2024ம் ஆண்டு தொடக்கத்திலோ டிராவல் மார்ட் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தனர். ஏற்கனவே 2 முறை டிராவல் மார்ட் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.














