நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரானது நிச்சயம் யாராலும் மறக்க முடியாத தொடராக மாறியுள்ளது. குறிப்பாக, நேற்றும், இன்றும் நடைபெற்ற போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கியபோது ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் யாருக்காவது அதிர்ச்சியைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டி20 உலகக்கோப்பை:
அமெரிக்கா, பப்புவா நியூ கினியா, நேபாளம், உகாண்டா அணிகள் தங்கள் திறமையை காட்டுவார்களா? என்று கருதப்பட்டது. பலரின் கணிப்புகளையும் மீறி குட்டி, குட்டி அணிகள் பெரிய அணிகளை பயமுறுத்தியது. அமெரிக்கா பாகிஸ்தானை வீழ்த்தியது. பப்புவா நியூ கினியா வெஸ்ட் இண்டீசை அச்சுறுத்தியது. நேபாளம் தென்னாப்பிரிக்க அணிக்கு தண்ணி காட்டியது என்று லீக் சுற்றிலே பல சுவாரஸ்யங்கள் அரங்கேறியது.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணியான ஆப்கானிஸ்தான் லீக் சுற்றிலே நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இதையடுத்து, சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம் அணி உள்ளிட்ட பிரிவுகளில் இடம்பெற்றது. மிகவும் சவாலான இந்த பிரிவில் இந்திய அணியிடம் தோல்வியைச் சந்தித்த பிறகு, யாரும் எதிர்பார்க்காத வகையில் மீண்டு வந்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
காட்டடி அடித்த ரோகித்:
இந்த பரபரப்பான சூழலில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியிடம் தோல்வியை தழுவி, வங்கதேசம் அணியை ஆப்கான் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு இந்தியாவுடன் சேர்ந்து முன்னேறலாம் என்ற பொன்னான வாய்ப்பு ஆப்கானுக்கு கிட்டியது. ஏற்கனவே, கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்ததற்கு பழிதீர்க்கும் முனைப்பில் இருந்த இந்தியாவிற்கு இந்த வாய்ப்பு பொன்னான வாய்ப்பாக அமைந்தது.
மேலும், ஆஸ்திரேலியா போன்ற அணியை அரையிறுதிக்கு முன்பே வெளியேற்றிவிட்டால் இந்தியாவிற்கு வாய்ப்பு பிரகாசமானதாக மாறிவிடும். இதனால், நேற்றைய போட்டியில் கோலி அவுட்டான பிறகு, ரோகித் சர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். இந்த தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு காட்டடி அடித்த ரோகித் சிக்ஸர் மழை பொழிந்தார். 41 பந்துகளில் 8 சிக்ஸருடன் 92 ரன்களை எடுத்தார்.
உற்சாகமாக களமிறங்கிய ஆப்கான்:
இதையடுத்து, 206 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்காக டிராவிஸ் ஹெட் போராடினாலும் இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியின் வெற்றி ஆப்கானை இன்னும் உற்சாகப்படுத்தியது.
அதே உற்சாகத்தில் இந்திய நேரப்படி இன்று காலை வங்கதேசத்துடன் மோதியது. வங்கதேசத்தின் சிறப்பான பந்துவீச்சால் ஆப்கானிஸ்தானால் ரன்களை எடுக்க முடியவில்லை. இருப்பினும், குர்பாஸ் – ரஷீத்கான் பேட்டிங்கால் அவர்கள் 115 ரன்கள் எடுத்தனர். பின்னர், 116 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆப்கான் பந்துவீச்சாளர்கள் குடைச்சல் தந்தனர்.
அரையிறுதியில் இந்தியா, ஆப்கான்:
டன்ஷித், ஷான்டோ, ஷகிப் ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாக்கினர். அதிரடி காட்ட முயன்ற சவுமியா 10 ரன்களிலும், தௌகித் 10 ரன்களிலும் அவுட்டாகினர். தொடக்க வீரர் லிட்டன்தாஸ் தனி ஆளாக போராடினார். இதில், 12.1 ஓவர்களில் இலக்கை எட்டினால் வங்கதேசம் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற பொன்னான வாய்ப்பும் உருவாகியது.
இதனால், அவர்கள் அதிரடி காட்டவும் முயற்சித்தனர். மழை குறுக்கிட்டதால் 19 ஓவர்களுக்கு 115 என்று இலக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், நவீன் உல் ஹக், கேப்டன் ரஷீத்கான் மிரட்டல் பவுலிங்கால் வங்கதேசம் நிலைகுலைந்தது. இறுதியில் 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு அவுட்டானது வங்கதேசம். இதனால், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு நுழைந்தது.
பழிக்குப் பழி:
மேலும், கடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் தோல்விப்பிடியில் இருந்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல் இரட்டை சதத்தால் வெற்றி பெற்றது. இந்திய அணியிடம் இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை வென்றது. இந்திய அணி, ஆப்கானிஸ்தானும் சேர்ந்து இந்த முறை ஆஸ்திரேலியாவை பழி தீர்த்துக் கொண்டுள்ளனர். ஆப்கான் வெற்றிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.













