தமிழ் திரையுலகின் மிக பிரபலமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவரது மூத்த மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஆண்டனியின் மகளை பிரபலத்தின் மகளாக மட்டுமின்றி ஒரு பதின்ம வயது சிறுமியின் தற்கொலையாகவே எண்ணும்போது மிகவும் வேதனையாக உள்ளது. இன்றைய காலத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவது சமூகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல.
தற்கொலை எண்ணங்கள் மட்டுமின்றி எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாம் மீண்டு வருவதற்கு கீழ்கண்ட வழிகளை பின்பற்றுங்கள்.
தனிமையை தவிருங்கள்:
இங்கு பல பிரச்சினைகளுக்கும் பிரதான காரணமாக இருப்பது தனிமை ஆகும், தனிமையில் நேரத்தை செலவிடுவது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அளவுக்கு அதிகமான தனிமை ஆபத்தானதாக மாறும். தனிமையில் இருக்கும்போது பாசிட்டிவ் எண்ணங்களை காட்டிலும் நெகட்டிவ் எண்ணங்கள், நமது பிரச்சினைகள் மனதில் மேலோங்கி நிற்கும். இதனால், தனிமையை தவிர்த்து நண்பர்களுடன், பிடித்தவர்களுடன், பிடித்த செயல்களில் நேரத்தை செலவிடுங்கள்.
மனம் விட்டு பேசுங்கள்:
பல சமயங்களில் பல பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கும், நம் மனதை வாட்டிக் கொண்டே இருப்பதற்கும் மனம் விட்டு பேசாததே ஆகும். நமக்கு கவலை தரும் பிரச்சினைகளுக்கு காரணமானவர்களிடமோ, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பவர்களிடமோ மனம் விட்டு பேச வேண்டும். குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். பெற்றோர்களை தவிர உங்களுக்கு வேறு யாராலும் பாதுகாப்பை தர முடியாது.
விட்டு விலகுங்கள்:
பல பிரச்சினைகளுக்கு தீர்வு அந்த பிரச்சினையை நாம் தீர்க்க முடியாவிட்டால் அதை விட்டு விலகுவது ஆகும். நமக்கு ஒரு நபரால் பிரச்சினை என்றால் அந்த நபரை விட்டு விலகிவிடுவது மிகச்சிறந்த தீர்வு. அந்த ஒரு நபருக்காக நம்மை பிடித்தவர்கள் பலர் வாழும் இந்த உலகில் இருந்து நாம் விடைபெறுவது முட்டாள்தனம் ஆகும். தீர்வு காண முடியாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண அந்த பிரச்சினைகளை விட்டு விலகிவிடுவதே தீர்வு ஆகும். கடந்து செல்வது மிக மிக சிறந்த முடிவு ஆகும்.
காலமே மருந்து:
எந்தவொரு பிரச்சினைக்கும் காலமே மிகச்சிறந்த மருந்து என்று கூறியிருக்கிறார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. இன்று நமக்கு கடினமாக தெரியும் சில தருணங்கள் சில காலங்களுக்கு பிறகு வெறும் நினைவுகளாக மாறிப்போகலாம். அதனால், ஜீரணிக்க முடியாத சில பிரச்சினைகளை காலம் ஜீரணிக்க வைத்துவிடும்.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஏதாவது ஒரு விதத்தில் நாம் காரணமாக இருப்போம். அதனால், நாம் சந்திக்கும் பிரச்சினைகளை நம்மால் தீர்க்க முடியும் என்று நம்புங்கள்.














