தமிழர்களின் மிகப்பெரிய பண்டிகையாகவும், முதன்மை பண்டிகையாகவும் கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே மக்களுக்கு குதூகலம் பிறந்துவிடும். வரும் திங்கட்கிழமை பொங்கல் கொண்டாட உள்ளதால் வெளியூர்களில் வசித்து வரும் மாணவர்களும், பணிபுரிந்து வரும் இளைஞர்களும் தங்களது குடும்பங்களை காண சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் படையெடுத்து வருகின்றனர்.
நெருங்கும் பொங்கல்:
வெளியூர்களில் இருந்து அதிகம் பேர் வசித்து வரும் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி ஆகிய பெரு நகரங்களில் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மதுரை, சேலம், நெல்லை ஆகிய பகுதிகளில் பேருந்துகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
குறிப்பாக, சென்னையில் அரசு பேருந்துகளில் மட்டும் வெளியூர் செல்வதற்காக 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், நேற்று முதல் சென்னையில் வெளியூர் செல்லும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. முன்பதிவு செய்த பேருந்துகள் அனைத்தும் அதாவது அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகள் புதிய பேருந்து நிலையமான கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது.
வெளியூர் செல்லும் பயணிகள்:
முன்பதிவு செய்யப்படாத 3×2 இருக்கைகள் கொண்ட பேருந்துகள் மட்டுமே வெளியூர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு செல்கிறது. இன்றும், நாளையும் வழக்கத்தை விட அதிகளவு பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு முறையான ரயில் மற்றும் மெட்ரோ வசதிகள் இல்லாததால் பயணிகள் அங்கு செல்ல பேருந்துகளையும், ஷேர் ஆட்டோக்களையும் மட்டுமே நம்பியுள்ளனர்.
பேருந்துகள் மட்டுமின்றி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்களும் நிரம்பி வழிகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், எழும்பூர் ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. ஏற்கனவே இயக்கப்படும் ரயில்களுடன் நேற்று முன்தினம் முதல் சிறப்பு ரயில்களும் தென் தமிழகத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்வதால் பெருநகரங்களின் சாலைகள் வெறிச்சோட ஆரம்பித்துள்ளது.














