தமிழ்நாட்டில் அனைவரும் கொண்டாடும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மதங்களை கடந்து அனைவரும் சிறப்பாக இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
குறிப்பாக, தலைநகர் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு ரயில்களிலும், பேருந்துகளிலும் செல்வது வழக்கம். குடும்பத்துடன் செல்பவர்களின் முதன்மை தேர்வாக ரயில் இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கான ரயில்கள் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், பயணிகளின் வசதிகள் கருதி தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை – சென்னை:
கொங்கு மண்டலத்தில் இருந்து சென்னை திரும்புபவர்களின் வசதிக்காக கோவையில் இருந்து சென்னைக்கு வரும் 16ம் தேதி இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அடுத்த நாள் காலை 5 மணிக்கு தாம்பரத்திற்கு வந்தடையும். இந்த ரயில் 17ம் தேதி காலை 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட், சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக அன்றே மாலை 4.30 மணிக்கு கோவை வந்தடையும்.
பெங்களூர் – திருச்சி:
பெங்களூரில் இருந்து திருச்சிக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெங்களூரில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு திருச்சி வந்தடைய உள்ளது.
இந்த ரயில் மீண்டும் திருச்சியில் இருந்த அடுத்த நாள் அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு மதியம் 12 மணிக்கு சென்றடைய உள்ளது.
சென்னை – நெல்லை:
சென்னையில் இருந்து பெரும்பாலானோர் தென்தமிழகத்திற்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை – நெல்லை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து இன்று (11ம் தேதி) நாளை மறுநாள் (13ம் தேதி) மற்றும் 16ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, பாவூர்சத்திரம், கீழ்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன் மாதேவி வழியாக அடுத்தநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை செல்கிறது.
இதே வழித்தடத்தில் நாளை, 14ம் தேதி மற்றும் 17ம் தேதி நெல்லையில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்தடைய உள்ளது. இந்த ரயில்களில் பயணிக்க இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.














