பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே பொதுமக்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய கொண்டாட்டம் ஆகும். சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து எப்படியும் ஒரு வார காலத்திற்கு விடுமுறையில் மக்கள் இருப்பார்கள். குடும்பங்களுடன் சேர்ந்து மக்கள் திரைப்படங்களுக்கு செல்வது வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.
கேப்டன் மில்லர் – அயலான்
குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் அவர்களின் பெரும்பாலான பொழுதுபோக்காக திரையரங்கமே அமையும். இந்த வகையில் எப்போதும் பொங்கல் பண்டிகையை குறிவைத்து திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை குறிவைத்து வெளியான திரைப்படங்கள் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன். இதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்கள் கேப்டன் மில்லரும், அயலானும் ஆகும்.
ராக்கி, சாணிக்காயிதம் என்ற முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார். நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிகுமார் அயலான் படத்தை இயக்கியுள்ளார். பொதுவாக குடும்பங்களுடன் சென்று பார்க்க நன்கு சிரிக்க வைக்கும் படத்தை மக்கள் தேர்வு செய்வார்கள். அந்த வகையில் கேப்டன் மில்லரை காட்டிலும் பெரும்பாலான மக்களின் தேர்வாக அயலான் அமைந்துள்ளது.
ரசிகர்கள் தேர்வு எது?
ஏனென்றால், தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் வன்முறை காட்சிகளும், துப்பாக்கி தோட்டாக்களின் சத்தமும் அதிகளவில் உள்ளது. இது இளைஞர்களுக்கும், தனுஷ் ரசிகர்களுக்கும் பிடித்தாலும் குழந்தைகளுடன் சென்று படம் பார்க்க விரும்பும் குடும்பங்களுக்கு பெரியளவு விருப்பத்தை தராது.
ஆனால், அயலான் படத்தில் ஏலியன், ஏலியனின் சேட்டைகள், சிவகார்த்திகேயன், யோகிபாபு என பல சுவாரஸ்யமான அம்சங்களும், வேற்று கிரக வாசி கதையும் குழந்தைகளை பெரிதும் கவரும் என்பதால் குடும்பங்களின் தேர்வாக அயலான் அமைந்துள்ளது. அயலான் படத்தின் திரைக்கதையும் அதற்கேற்றவாறு குழந்தைகள் சென்று ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால், தற்போது ரசிகர்கள் கூட்டம் கேப்டன் மில்லரிடம் இருந்து அயலான் பக்கம் திரும்பியுள்ளது.














