தமிழ்நாட்டில் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வந்ததையடுத்து, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் படிப்பு மற்றும் வேலைக்காக வெளியூர்களில் இருந்து வந்து தங்கியுள்ள பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
மீண்டும் திரும்பும் மக்கள்:
இன்றுடன் விடுமுறை முடிவதால் பலரும் தங்களது சொந்த ஊர்களில் இருந்து தாங்கள் பணிபுரியும் மற்றும் வேலை செய்யும் ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் அதிகளவு கூட்டம் காணப்பட்டதால் பலரும் ஆம்னி பேருந்துகளில் சென்றனர். வழக்கமாக தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகள் இயல்பைவிட பன்மடங்கு கட்டணம் அதிகம் வைத்து வசூலிப்பதாக தொடர் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக கட்டணம் வசூலித்த 120 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், அரசின் இந்த செயலை கண்டித்து தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “ ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாதபோதிலும் அரசுக்கும், பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கிக் கொண்டுள்ளோம்.
ஆம்னி பேருந்துகள் ஸ்ட்ரைக்:
கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரும் சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து இன்று வரை அதிகக்கட்டணம் புகார் இல்லாமல் இயக்கி வந்த போதிலும் ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின்படி சிறைபிடித்தும், மீண்டும் சிறைபிடிப்பதை நிறுத்தக் கோரியும் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது.
இன்று ஆம்னி பேருந்துகளில் 1 லட்சத்திற்கும் மேலான பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள். அவர்களை போக்குவரத்து துறை சார்பாக வழியில் இறக்கிவிடுவதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து சங்கங்களும் இணைந்து வேறு வழியில்லாமல் கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம்.”
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகள் திடீரென ஸ்ட்ரைக் அறிவித்துள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.














