நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பல ஆச்சரியங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. கிரிக்கெட் போட்டிகளில் எக்காலத்திற்கும் பேசப்படுவது போல போட்டிகள் அபூர்வமாக எப்போதாவதுதான் அரங்கேறும். ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய பேட்டி அப்படி ஒரு போட்டியாகவே நேற்று மாறியது எனலாம். அதற்கு முழு காரணமும் மேக்ஸ்வெல் மட்டுமே.
மிரள வைத்த மேக்ஸ்வெல்:
292 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றபோது தனி ஆளாக போராடி இரட்டை சதம் அடித்து வெற்றி பெற வைத்தார் என்றால் அவரது பேட்டிங் எந்தளவு அபாரமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வார்னர், ட்ராவிஸ் ஹெட், மார்ஷ், லபுஷேனே, இங்கிலீஷ், ஸ்டோய்னிஸ், ஸ்டார்க் என 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இனி ஆப்கானிஸ்தானுக்கே வெற்றி என்றே ஆஸ்திரேலிய அணியே நினைத்திருக்கும்.
ஆனால், தான் களத்தில் நிற்கும் வரை அது நடக்கவே நடக்காது என்றும், தாங்கள் எப்போதுமே சாம்பியன் அணிதான் என்றும் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவை தலைநிமிர வைத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
அன்று கபில்தேவ்:
கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் ஒரே ஒரு முறை மட்டுமே அரங்கேறியது. 1983ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆடிய இந்திய அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணிக்காக களமிறங்கிய கேப்டன் கபில்தேவ் தனி ஆளாக 175 ரன்களை விளாசி 266 ரன்களை இந்தியா குவிக்க உதவினார்.
அன்றைய காலகட்டத்தில் இந்தியாவை விட பலம் வாய்ந்த அணியாக இருந்த ஜிம்பாப்வே இலக்கை நோக்கி ஆடி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. அன்று கபில்தேவ் ஆடிய இன்னிங்ஸ் அன்று கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்.
கபில்தேவை மிஞ்சிய மேக்ஸ்வெல்:
குறிப்பாக, சதமடித்த பிறகு முதுகுவலி, தசைப்பிடிப்பு என்று அவதிக்குள்ளான மேக்ஸ்வெல்லுக்கு கால் நகர்வு என்பதே ஒரு கட்டத்திற்கு மேல் வரவில்லை. அவர் சிறுவர்கள் கிரிக்கெட்டில் ஆடுவது போல இடது காலை நகர்த்தி மட்டுமே ஆடினார். அதுவும் சிக்ஸர், பவுண்டரி மட்டுமே விளாசினார். கபில்தேவை விட மேக்ஸ்வெல் ஆடிய இன்னிங்ஸ் ஏன் சிறப்பு என்றால், கபில்தேவ் இலக்கை நிர்ணயிக்க ஆடினார். ஆனால், மேக்ஸ்வெல் இலக்கை நோக்கி ஆடினார். மேலும், 100 ரன்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் ஒற்றை காலிலே ஆடினார் என்பதுதான் உண்மை. அவரை அவுட்டாக்க முடியாமலும், பீல்டிங்கில் சொதப்பியும் ஆப்கானிஸ்தான் அணியினர் கடைசியில் ஆடிய ஆட்டம் அவர்கள் வெற்றிக்காக காத்திருந்த அத்தனை ரசிகர்களையும் உடைத்துவிட்டது என்றே சொல்லலாம்.
மீண்டு வருமா ஆப்கானிஸ்தான்?
இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என சாம்பியன் அணிகளை எல்லாம் வீழ்த்திய ஆப்கானிஸ்தானுக்கு சாம்பியன்களுக்கு எல்லாம் சாம்பியனாக திகழும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த கிடைத்த, அதுவும் உலகக்கோப்பையில் வீழ்த்த கிடைத்த பொன்னான வாய்ப்பை இப்படி நழுவ விட்டதுதான் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இது அவர்களை மனதளவில் கடுமையாக பாதிக்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும், விடாமுயற்சியுடன் அடுத்த போட்டியில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்புக்கு போராட வேண்டும்.
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்காக வருத்தப்பட்டாலும், மேக்ஸ்வெல் பேட்டிங்கை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு கட்டத்தில் மேக்ஸ்வெல் மைதானத்தில் வலி தாங்க முடியாமல் படுத்தபோது ஜம்பா பேட்டிங் செய்வதற்காக மைதானத்தின் அருகே வரை வந்துவிட்டார். ஆனால், தன் அணிக்காக தான் போராடுவேன் என்று கடுமையான மன உறுதியுடன் ஆடி 21 பவுண்டரி 10 சிக்ஸருடன் 128 பந்துகளில் 201 ரன்களை எட்டி மேக்சிமம் மேக்ஸ்வெல் என்பதை நிரூபித்துவிட்டார்.














