உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
அகமதாபாத் மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடர முழுவதும் வெற்றியை பெற்ற இந்திய அணி, பின்பாதியில் பழைய பலத்துடன் மீண்டு இறுதிப்போட்டிக்கு வந்த ஆஸ்திரேலியாவும் உலகக்கோப்பைக்காக மல்லுகட்டுகின்றன. பலமிகுந்த இரு அணிகள் மோதுவதால் கோப்பை யாருக்கு? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பேட்டிங்:
இந்திய அணியை பொறுத்தவரையில் சொந்த மண்ணில் ஆடுவதும், லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு இருப்பதும் பெரும் பலம் ஆகும். இந்திய அணி இந்த தொடர் தொடங்கியது முதல் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்திய அணியின் பெரும் பலமாக பேட்டிங்கில் ரோகித்சர்மா, விராட்கோலி, சுப்மன்கில், ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் உள்ளனர். இவர்கள் அனைவரும் சிறப்பாக ஆட வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையிலும் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்க அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். மிடில் ஆர்டரில் லபுஷேனே, ஸ்மித் சிறப்பாக ஆட வேண்டியது முக்கியம். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசி ஆட்டத்தையே மாற்றிய மேக்ஸ்வெல் மிகவும் ஆபத்தான வீரராக கருதப்படுகிறார். அவரை விரைவிலே அவுட்டாக்க வேண்டியது இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் ஆகும். ஸ்டோய்னிஸ், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆல்ரவுண்டர்களாகவும் இருப்பது அந்த அணிக்கு பலம் ஆகும்.
பவுலிங்:
இந்திய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பும்ரா, ஷமி, சிராஜ் முக்கிய தூண்களாக உள்ளனர். குறிப்பாக, இந்த தொடர் முழுவதும் வேகத்தில் அசத்தி வரும் ஷமி இன்றைய போட்டியிலும் ஆஸ்திரேலியாவை நிலை குலைய வைக்க வேண்டியது அவசியம் ஆகும்.
அதேபோல, சுழலில் ஜடேஜா, குல்தீப் இந்திய அணியின் துருப்புச்சீட்டு ஆவார்கள். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஸ்டோய்னிஸ், கம்மின்ஸ் முக்கிய பந்துவீச்சாளர்களாக உள்ளனர். இவர்களுடன் ஜம்பா சுழலில் முக்கியமான வீரராக உள்ளார். ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லுக்கு நிகராக இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் உள்ளார். இவருக்கு ஆட்டம் பிடித்துவிட்டால் மைதானத்தில் நிச்சயம் சரவெடியை காணலாம்.
சாம்பியன் யார்?
மொத்தத்தில் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 20 ஆண்டுகள் பகையை இந்தியா தீர்த்து 3வது முறையாக கோப்பையை கையில் ஏந்தபோகிறதா? இல்லை ஆஸ்திரேலியா மீண்டும் ஒரு முறை இந்தியாவை வீழ்த்தப் போகிறதா? என்பது இன்றைய நாள் முடிவில் தெரிய வரும்.














