உலகக் கோப்பைத் தொடர் என்றாலே விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே சொல்ல வேண்டும். இந்த உலகக்கோப்பைத் தொடரும் அதற்கு விதி விலக்கல்ல. இந்த சூழலில், இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் இலங்கை – வங்கதேச அணிகள் மோதிய போட்டியும், மேத்யூஸ் பெயரும் காலத்திற்கும் மறக்க முடியாத அளவிற்கு மாறியுள்ளது.
டைம் அவுட்:
ஆட்டத்தின் 25வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். அந்த ஓவரில் நன்றாக ஆடிக் கொண்டிருந்த சமரவிக்ரம 41 ரன்களில் அவுட்டானார். அடுத்து மேத்யூஸ் இறங்க வேண்டும். அப்போது, அவர் களமிறங்க தாமதமானதால் அவருக்கு அவுட் வழங்கப்பட்டது. டைம் அவுட் என்ற முறையில் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முழு காரணம் ஷகிப் அல் ஹசனே ஆகும்.
தான் களமிறங்குவதற்கு தன்னுடைய ஹெல்மெட் பட்டை சரியில்லாததும், அதன் காரணமாகவே தான் வருவதற்கு தாமதமானதாகவும் அவர் நடுவர்களிடமும், வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனிடமும் மைதானத்தில் நீண்ட விளக்கம் அளித்தார். ஆனால், அவரது விளக்கத்தை சற்றும் ஏற்றுக் கொள்ளாத ஷகிப் அல் ஹசன் தன்னுடைய அப்பீலை திரும்ப பெற முடியாது என்றும், விதி அப்படித்தான் உள்ளது என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால், வேறு வழியில்லாமல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதன்முறையாக டைம் அவுட் முறையில் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனைக்கு மேத்யூஸ் ஆளானார்.
விதிகள் சொல்வது என்ன?
கிரிக்கெட் விதிப்படி ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்தவுடன் அடுத்த வீரர் 3 நிமிடத்திற்குள் மைதானத்திற்குள் வர வேண்டும். அவ்வாறு அவர் வரத் தவறினால் அவர் அவுட்டானதாக அறிவிக்க வேண்டும் என்று எதிரணி கேப்டன் அப்பீல் செய்யலாம். அவ்வாறு அப்பீல் செய்தால் அந்த புதிய பேட்ஸ்மேன் எந்த பந்தையும் சந்திக்காமலே அவுட் என்று அறிவிக்கலாம் என்று விதி கூறுகிறது. ஆனால், அறத்தின்படி விளையாட வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த வீரரும், கேப்டனும் அதை விரும்புவதில்லை.
ஆனால், வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் தன்னுடைய கடைசி உலகக்கோப்பையில் ஆடும் ஒரு மூத்த வீரரை இந்த முறையில் அவுட்டாக்கி வெளியேறச் சொன்னது பலருக்கும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், மேத்யூஸ் தன்னுடைய சூழலை விளக்கியும் அதை அவர்கள் ஏற்காதது ரசிகர்களுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது என்றே கூற வேண்டும்.
மேத்யூஸ் எடுத்த ரிவெஞ்ச்:
ஷகிப் அல் ஹசனின் இந்த செயலுக்கு அவரை அவுட்டாக்கிய மேத்யூஸ் டைம் ஆகிவிட்டது கிளம்பு என்று சொல்வது போல சைகை செய்ததுதான் இந்த ஆட்டத்தின் ஹைலைட் என்றே சொல்ல வேண்டும். கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்று சொல்லப்பட்டாலும் சமீபகாலமாக ஆக்ரோஷங்களும், மோதல்களும் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகிறது. ஆனால், இந்த மன்கட், டைம் அவுட் முறைகளை எந்த அணியும், எந்த வீரரும் விரும்புவதில்லை.














