இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை ஆகும், நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை வரும் 15-ந் தேதி தொடங்கி வரும் 24-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? என்று கீழே காணலாம்.
நவராத்திரி:
புராணத்தில் அரக்கர்கள் அவ்வப்போது தேவர்களுக்கு இடையூறு செய்து நன்மைகளுக்கு எதிராக செயல்படுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அரக்கர்களின் அரக்கனாக மகிஷாசுரன் இருந்தான். அவன் மிக கடுமையாக தவம் செய்து பிரம்ம தேவனிடம் வரம் ஒன்றை பெற்றான். அதாவது, மாபெரும் சக்தி கொண்ட ஒரு பெண்ணால் மட்டுமே அவனை அழிக்க முடியும் என்பதே அந்த வரம்.
அரக்கர்களின் தலைவனான மகிஷாசுரன் தன்னுடைய அசுரகுணத்தாலும், தன்னுடைய சக்தியாலும் பூலோகம், சொர்க்கலோகம் மற்றும் நரகத்தை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு சென்றான். அவனை வதம் செய்தால் மட்டுமே இந்த மூன்று லோகத்தையும் காப்பாற்ற முடியும் என்ற சூழல் இருந்தது. அவன் பெற்ற வரத்தால்
அவனை சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரால் அழிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
மகிஷாசுரவர்த்தினி
இதையடுத்து, சிவபெருமானின் தேவியான சக்தி, விஷ்ணு பெருமானின் தேவியான லட்சுமி மற்றும் பிரம்மனின் தேவியான சரஸ்வதி ஆகிய மூன்று பெரும் தேவிகளும் இணைந்து மாபெரும் சக்தியாக உருவெடுத்தனர். மாபெரும் சக்தியான அந்த 3 தேவிகளும் இணைந்து மகிஷாசுரவர்த்தினியாக அவதாரம் எடுத்தனர். அந்த அவதாரத்தால் அவர்கள் மூன்று லோகத்தையும் வாட்டி வதைத்த மகிஷாசுரனை அழித்தனர். இந்த அவதாரமே நவராத்திரி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.














