மலையாள திரையுலகம் தரமான படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர்கள் என்பதற்கு பெயர் பெற்றவர்கள். இதன் காரணமாகவே பல படங்கள் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பிரம்மாண்ட வெற்றி பெறும். பிரேமம் படத்திற்கு பிறகு தற்போது அப்படி ஒரு வெற்றியை பெற்றுள்ள படம் மஞ்சுமல் பாய்ஸ்..
குணாவை கொண்டாடவில்லையா?
திரும்பும் திசையெல்லாம் அந்த படத்தை பற்றிய பேச்சுகளும், அந்த படத்தின் வெற்றியை பற்றியே பேசுகின்றனர். குணா படத்தையும், அந்த படத்தில் வரும் குகையையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படமே மஞ்சுமல் பாய்ஸ். இந்த படத்தை பார்த்து கொண்டாடும் சிலர் மலையாள சினிமா கொண்டாடிய குணா படத்தை தமிழ் சினிமா கொண்டாடவில்லை என்று குறை கூறுகின்றனர்.
நிச்சயமாக, குணா படத்தை தமிழ் சினிமா கொண்டாடவில்லை என்று கூறவே முடியாது.
ஒரு படம் ஓடினால் மட்டும்தான் அந்த படத்தை நாம் கொண்டாடினோம் என்று அர்த்தமா? குணா படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாத படமாக இருக்கலாம். அதற்காக குணா படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடவில்லை என்பதை ஏற்கவே முடியாது. மஞ்சுமல் பாய்ஸ் படம் வந்த பிறகுதான் குணா படத்தை பற்றியும், குணா படத்தில் வந்த கண்மணி அன்போடு பாடலையும், அபிராமி அபிராமி என்று கமல் சொல்லும் வசனத்தையும், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்ற வசனத்தையும் நாம் அறிந்தோமா?
தளபதி வெற்றிக்கு காரணம் என்ன?
1991ல் வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற மேலே கூறிய வசனங்கள் அனைத்தும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக மிக மனதிற்கு நெருக்கமானவை. அப்படி இருந்தும் குணா படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாமல் போனதற்கு என்ன காரணம்? பலரும் அதற்கு கூறும் காரணம் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தின் வெற்றியால் குணா வெற்றி பறிக்கப்பட்டுவிட்டது என்பதே.
குணா படத்தில் மிகப்பெரிய காதல் சோகம் இருந்தும், தளபதி படம் அந்த சோகத்தை கடந்து வெற்றியை பெற்றதற்கு காரணம் ரஜினிகாந்த் மட்டுமே அல்ல. தளபதி படமானது முத்து, அண்ணாமலை, படையப்பா போன்ற மற்ற ரஜினியின் மாஸ் மசாலா படம் அல்ல. சூர்யா என்ற ஒருவனின் சோக கதை.
சூர்யாவின் சோகம்:
குணா படத்தில் கமல்ஹாசன் ஏற்ற குணா கதாபாத்திரத்தின் காதல் சோகமே படத்தின் உச்சம். ஆனால், தளபதி படத்தில் சூர்யா என்ற ரஜினிகாந்த் ஏற்ற கதாபாத்திரம் சந்திக்கும் சோகங்கள் ஏராளம். அதாவது, பிறக்கும்போதே தன் தாயால் ஒதுக்கப்பட்ட குழந்தை, வளரும்போது தாய், தந்தை யாரென்று தெரியாமல் வளரும் சூர்யா, போதியளவு படிப்பறிவு இல்லாமல் சாதாரண இடத்தில் வளரும் இளைஞன், நல்ல விஷயங்களுக்காக கோபப்படும் இளைஞன், ஒரு மனிதனின் அதிகபட்ச ஆசையான காதலிலும் தோற்ற ஒருவன், ஒரு கட்டத்தில் தன் தாய் யாரென்று தெரிந்த பிறகும் தன் தாயிடமும், குடும்பத்திடமும் சேர முடியாமல் தவிக்கும் இளைஞன், தாய் யாரென்று தெரிந்த பின்பும் தந்தை யாரென்று தெரியாத இளைஞன், தன் காதலித்த பெண் தன் தம்பியையே திருமணம் செய்திருப்பதை காணும் ஒரு இளைஞன், தனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் நண்பனின் மரணத்தை தாங்கிக் கொள்ளும் இளைஞன் என வாழ்வில் ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய குடும்பம், காதல் என அனைத்தையும் தொலைத்த ஒரு ஆக்ரோஷமான இளைஞனாக சூர்யா இருப்பார்.
அந்த சோகங்களும், கோபங்களும் கலந்த சூர்யா கதாபாத்திரத்தை ரஜினிகாந்த் மெருகேற்றியிருப்பார், நன்றாக உற்று கவனித்தால் ஆறிலிருந்து அறுபது வரை படத்திற்கு பிறகு அனைத்தையும் இழந்த ஒரு மனிதராக ரஜினிகாந்த் தளபதி படத்தில் நடித்திருப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு என்று தளபதி படத்தில் அவரின் அடையாளமான பஞ்ச் டயலாக்குகளோ, ஸ்டைல் காட்சிகளோ இருக்கவே இருக்காது. அதற்கு பதிலாக சூர்யா – தேவாவின் நட்பு பலமானதாக இருக்கும்.
குணா என்றுமே காவியம்:
கமல்ஹாசனின் காதல் காவியங்களில் புன்னகை மன்னன், ஏக் துஜே கேலியே படங்களுக்கு உள்ள சிறப்பை போன்று குணாவிற்கும் தனி இடமே உண்டு. ஆனால், குணாவின் கண்ணீரையும், காதல் சோகத்தையும் தாண்டி சூர்யா என்ற ஆக்ரோஷமான இளைஞன் அனைத்தையும் இழந்தது ரசிகர்களின் மனதிற்கு மேலும் நெருக்கமானது.
மேலே நான் கூறிய காரணங்களால் குணா படத்தை காட்டிலும் தளபதி படம் வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமான இடத்தை பிடித்து வெற்றி பெற்றிருக்கலாம். குணா படம் வர்த்தக ரீதியாக ஓடவில்லை என்பதற்காக அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஒதுக்கிவிட்டனர் என்பதை ஏற்க முடியாது.














