நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் முழுமூச்சில் இறங்கியுள்ளன. தேசிய அளவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றவும் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜயகாந்த் அலை:
இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. பக்கம் ஏற்கனவே காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், வி.சி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் உள்ளன. இன்னும் சில கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க.வும் தங்கள் தரப்பில் கூட்டணி பங்கீட்டிற்கான பணியை தொடங்கி உள்ளனர்.
இந்த சூழலில், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. கவனம் தே.மு.தி.க. பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் கட்சியை தொடங்கியபோது இந்த இரண்டு பிரம்மாண்ட கட்சிகளுக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்திய கட்சி தே.மு.தி.க. அதற்கு ஒரே காரணம் நடிகர் விஜயகாந்த்.
தே.மு.தி.க. யார் பக்கம்?
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி காலமானார். அவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் அவரது நினைவிடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தற்போது தமிழ்நாட்டில் விஜயகாந்த அலை வீசி வருவதால் தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்கும் கட்சிகளுக்கு அனுதாப அலை மூலமாக வாக்குகள் குவியும் என்று கருதப்படுகிறது. இதனால், இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் தே.மு.தி.க. பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர். திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பா.ஜ.க.வும் தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகின்றனர்.
கூட்டணிக்கு போட்டி
ஏனென்றால், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட பிறகு பா.ஜ.க. தனித்து உள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணியில்லை என்று அ.தி.மு.க. திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால், தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுத்தால் வாக்கு வங்கி பலப்படும் என்று பா.ஜ.க. கருதுகிறது இன்னும் சில தினங்களில் தே.மு.தி.க. யார் பக்கம் என்பது தெரிந்து விடும். எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட தலைமையில் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தே.மு.தி.க. தங்கள் பக்கம் இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்று அ.தி.மு.க. கருதுகிறது.
அதேசமயம் தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே ஏராளமான கட்சிகள் இருப்பதால், தே.மு.தி.க.வும் இணைந்தால் மற்ற கட்சிகளுக்கு குறைந்த அளவிலான தொகுதிகளே கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.














