ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வந்துவிட்டால் தலா 5 முறை கோப்பையை வென்ற மும்பை, சென்னை அணிகளுக்கு நிகரான அளவிற்கு உன்னிப்பாக கவனிக்கப்படும் அணி ஆர்சிபி. மும்பை, சென்னைக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஆர்சிபி அணி மீது ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது. அதற்கு காரணம் கிரிக்கெட்டின் அரசன் எனப்படும் விராட் கோலியே ஆகும்.
ஆர்சிபி புதிய கேப்டன்:
17 சீசன்களாக ஒரு முறை கூட கோப்பையை வெல்லாவிட்டாலும் ஆர்சிபி ரசிகர்கள் அந்த அணிக்கு தரும் ஆதரவானது துளியளவும் குறைந்தது இல்லை. ஆர்சிபி அணியின் கேப்டனான ஃபாப் டுப்ளிசிஸ் கடந்த ஏலத்தில் டெல்லி அணிக்குச் சென்ற நிலையில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் யார்? என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரஜத் படிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் நோக்கத்திலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் ஆர்சிபி கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த படிதார்?
31 வயதான ரஜத் படிதார் இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளும், 1 ஒருநாள் போட்டியும் ஆடியுள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்த படிதார் 2021ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபி அணிக்காக அறிமுகமாகியுள்ளார். இதுவரை 27 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள படிதார் 1 சதம், 7 அரைசதத்துடன் 799 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 112 ரன்களை எடுத்துள்ளார்.
ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை விராட் கோலி, லிவிங்ஸ்டன், ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், பில் சால்ட் ஆகியோர் அனுபவசாலிகள் ஆவார்கள். ஆனாலும், அடுத்தடுத்த சீசன்களை கருத்தில் கொண்டு ரஜத் படிதாருக்கு கேப்டன்சி வழங்கப்பட்டுள்ளது.
அனுபவமும், இளமையும்:
இந்த நிலையில் ரஜத் படிதாருக்கு கேப்டன்சி வழங்கப்பட்டுள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விராட் கோலியும் ஆர்சிபி ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அனுபவமும், திறமையும் கொண்ட மூத்த வீரர்களுடன் ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், நுவன் துஷாரா, படிக்கல், யஷ் தயாள், ஜேக்கப் பெத்தேல் போன்ற இளம் வீரர்களும் உள்ளனர்.
வரலாறு படைப்பாரா ரஜத் படிதார்?
இந்த முறை களமிறங்க உள்ள ஆர்சிபி அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் வலுவான அணியாகவே உள்ளது. இதனால், இந்த முறை முதல் முறை ஆர்சிபி கோப்பையை வெல்லுமா? ரஜத் படிதார் அந்த வரலாற்றை படைப்பாரா? கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.














