கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் திருவிழா வரும் 22ம் தேதி தொடங்குகிறது. தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை, சென்னை அணிகள் தங்களது அடுத்த பட்டத்திற்காகவும், நடப்பு சாம்பியன் கொல்கத்தா தனது பட்டத்தை தக்க வைப்பதற்காகவும், டெல்லி, பஞ்சாப், லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகள் தங்களது முதல் பட்டத்திற்காகவும், ஹைதரபாத், ராஜஸ்தான், குஜராத் அணிகள் மீண்டும் பட்டத்தை கைப்பற்றவும் களமிறங்குகின்றன.
கேகேஆர் – ஆர்சிபி
இதில் முதல் போட்டியிலே நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. கடந்த ஐபிஎல் தொடரில் கம்பீரின் வழிகாட்டுதலுடன் எந்த சிரமும் இல்லாமல் கொல்கத்தா கோப்பையை வென்றது. இந்த முறையும் வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்க கொல்கத்தா அணி முயற்சிக்கும்.
அனுபவமிகுந்த கொல்கத்தா:
அதேசமயம், தங்களது முதல் கோப்பை கனவுடன் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணியும் வெற்றியுடன் தொடரை தொடங்க முனைப்பு காட்டும். கொல்கத்தா அணி அனுபவம் வாய்ந்த ரஹானே தலைமையில் களமிறங்குகிறது. ரஹானே, ரிங்குசிங், டி காக், குர்பாஸ், ரோவ்மென் பவெல், மணிஷ் பாண்டே, வெங்கடேஷ் ஐயர், ரஸெல், ராமன்தீப்சிங் என பேட்டிங் பட்டாளமே வைத்துள்ளனர். பந்துவீச்சில் வருண், சுனில் நரைன் என மாயாஜால சுழற்பந்துவீச்சாளர்கள், ராணா. வைபவ் அரோரா, ஜான்சன் என வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
படிதார் படை:
இளம் வீரரான ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி அணி முதன்முறையாக களமிறங்கியுள்ளது. 18 வருட கோப்பை கனவை படிதார் படை நிறைவேற்றுமா? என்று எதிர்பார்க்கலாம்.
ஆர்சிபி அணியின் நம்பிக்கை நட்சத்திரமே விராட் கோலி ஆவார். அவருடன் படிதார், ஜேக்கப் பெத்தேல், லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, படிக்கல், சுவஸ்திக், குருணல் பாண்ட்யா, சுவப்னில் சிங், டிம் டேவிட், ஷெபர்ட், மனோஜ் என பேட்டிங் பட்டாளமே உள்ளனர். அதேபோல, பந்துவீச்சில் புவனேஷ்வர், ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, ரஷீக்தர், நுவன் துஷாரா, நிகிடி, யஷ் தயாள் உள்ளனர்.
ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ள இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.














