ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த ஆர்சிபி – சென்னை போட்டி நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் 17 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியுள்ளது. அதுவும் 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
ஆர்சிபி அதிரடி:
இந்த போட்டியில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்சிபி அணியின் செயல்பாடு பாராட்டும் வகையில் இருந்தது. டாஸில் தோற்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தபோது, பில் சால்ட் – விராட் கோலி இருவருக்கும் பந்து சரியாக சிக்கவில்லை. இருப்பினும், சால்ட் அதிரடி காட்டினார். கேப்டன் படிதார் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். படிக்கல் அதிரடி, டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸரால் ஆர்சிபி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
கேப்டன்சியில் கலக்கிய படிதார்:
சேப்பாக்கம் போன்ற மைதானத்தில் 197 ரன்கள் இலக்கு என்பது மிகப்பெரியது ஆகும். சொந்த மண், நீண்ட அனுபவம் வாய்ந்த பேட்டிங் படையை எப்படி ஆர்சிபி சமாளிக்கப் போகிறது? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஆர்சிபி விருந்தளித்து என்றே கூறலாம். நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு பேட்டிங், பந்துவீச்சு எப்படி பாராட்டும் வகையில் இருந்ததோ, அதேபோல ரஜத் படிதாரின் கேப்டன்சியும் பாராட்டும் வகையில் இருந்தது என்றே கூற வேண்டும்.
பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம்:
ஏனென்றால் பந்துவீச்சாளர்களை அவர் பயன்படுத்திய விதம் மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. புவனேஷ்வர், ஹேசில்வுட்டை பயன்படுத்தி பவர்ப்ளேவில் அழுத்தம் தந்தது, குருணல் பாண்ட்யா பிரதான பந்துவீச்சாளராக இருந்தாலும் சேப்பாக்கம் மைதானத்தில் அவரது பந்துவீச்சு விளாசப்படும் என்பதை கணித்து அவருக்கு ஆட்டம் ஆர்சிபி கைக்குள் வரும் வரை பவுலிங் தராதது, லிவிங்ஸ்டன், சுயாஷ் சர்மாவை சரியாக பயன்படுத்தியது, யஷ் தயாளை தக்க நேரத்தில் வீச வைத்தது என அழுத்தத்தை சென்னை பக்கம் திருப்பினார்.
இதன் காரணமாகவே, நேற்றைய போட்டியில் சென்னை அணி தனது முதல் சிக்ஸரை 10வது ஓவரில் அடித்தது. கவுதம் கம்பீருக்கு பிறகு தோனிக்கு இப்படி ஒரு ஃபீல்ட் செட் செய்தது படிதாரே ஆகும். மேலும், டாஸ் தோற்றாலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதையே முழு நோக்கமாக கொண்டு ரஜத் படிதார் ஆடுவது நேற்றைய போட்டியில் கண்கூடாக தெரிந்தது. வெற்றிக்காக ஒவ்வொரு பந்தையும் விளாசுவதுடன், அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்களை அவர் பயன்படுத்தும் விதமும் பாராட்டும் வகையில் இருந்தது.
தோனிக்கு உகந்த மரியாதை:
மேலும், போட்டி முடிந்த பிறகு தோனிக்கு கைகொடுக்கும்போது ஒரு ஜாம்பவான் வீரருக்கு உரிய மரியாதையை அளிக்கும் விதமாக தனது தொப்பியை கழட்டி பின்னரே தோனிக்கு கைகொடுத்தார். தன்னைவிட அனுபவம் வாய்ந்த திறமை வாய்ந்த வீரருக்கு தொப்பியை கழட்டி கை கொடுப்பதே கிரிக்கெட்டின் சிறந்த பண்பாக இன்று வரை கருதப்படுகிறது. அதையும் ரஜத் படிதார் திறம்பட நேற்று செய்தார்.
விராட் கோலி, புவனேஷ்வர், ஹேசில்வுட், லிவிங்ஸ்டன், பில் சால்ட் போன்ற அனுபவம் வாய்ந்த திறமையான வீரர்களை திறம்பட ரஜத் படிதார் வழிநடத்துகிறார். இதனால்தான் கொல்கத்தா, சென்னை ஆகிய இரு அணிகளையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.














