ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் முதன்மையான அணியாக கருதப்பட்ட 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
தொடரை விட்டு வெளியேறிய சிஎஸ்கே:
இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது. எஞ்சியுள்ள 6 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ப்ளே ஆஃப் வாய்ப்பு சிஎஸ்கே-விற்கு சாத்தியமற்றது. இந்த நிலையில், இந்த தொடரில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணங்கள் என்ன என்பதை கீழே காணலாம்.
கைகொடுக்காத அனுபவம்:
பொதுவாக ஐபிஎல் தொடரைப் பொறுத்தமட்டில் மற்ற அணிகள் எல்லாம் அனுபவத்திற்கு நிகரான இளமையான வீரர்களை கொண்டே களமிறங்கும். ஆனால், 2 ஆண்டு தடைக்குப் பிறகு வந்த சென்னை அணி அனுபவ வீரர்களை கொண்டே களமிறங்கி ஆடி வருகிறது. தோனி, டுப்ளிசிஸ், வாட்சன், ப்ராவோ, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா என கடந்த சில ஆண்டுகளில் சென்னை அணியின் வெற்றிக்காக போராடியவர்கள் 30 வயதை கடந்த வீரர்களாகவே இருந்தனர்.
இதே ஃபார்முலாவையே இந்த முறை சென்னை அணி பின்பற்றியது. தோனி, ஜடேஜா அனுபவ வீரர்களுடன் ஏலத்தில் அஸ்வின், கான்வே, ராகுல் திரிபாதி, நாதன் எல்லீஸ், விஜய் சங்கர், தீபக் ஹுடா என 30 வயதை கடந்த வீரர்களை அதிகளவில் ஏலத்தில் எடுத்தனர். உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் ஆடிய அவர்களின் அனுபவம் அணிக்கு கைகொடுக்கும் என்று கருதினர்.
ஆனால், ஏராளமான இளைஞர்கள் பட்டாளத்துடன் களமிறங்கிய மற்ற அணிகளின் முன்பு அந்த வியூகம் கைகொடுக்காமல் போய்விட்டது என்றே கூறலாம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின், விஜய் சங்கர், தீபக் ஹுடா, ராகுல் திரிபாதி, கான்வே ஜொலிக்காமல் போனது சிஎஸ்கே-விற்கு பெரும் பின்னடைவாக மாறியது.
ருதுராஜ் காயம், சொதப்பிய பேட்டிங்:
மேலும், அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரின் பாதியில் இருந்தே தொடரை விட்டு வெளியேறியது சிஎஸ்கே-வின் பலத்தை குறைத்தது என்றே கூறலாம். சிஎஸ்கே-வின் ஹிட்டராக கருதப்பட்ட ஷிவம் துபே தனது திறமையை காட்டாததும் சிஎஸ்கே-வின் வெற்றியை பாதித்தது.
அவர் உள்ளூர் பந்துவீச்சாளர்கள் மீது காட்டும் ஆதிக்கத்தை சர்வதேச பந்துவீச்சாளர்கள் மீது காட்டவில்லை என்பது அவர் எந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிகளவு ரன்களை எடுத்தார் என்பதை உற்றுநோக்கினால் புலப்படும். மேலும், அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் தோனி களமிறங்கவில்லை என்பதும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இளைஞர்கள் ஆதிக்கம்:
சிஎஸ்கே-வைப் பொறுத்தவரை மிக எளிதில் ப்ளேயிங் லெவனை மாற்றவே மாட்டார்கள். ரவீந்திரா, கான்வே ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு பின்னர் அவர்கள் மாற்றப்பட்டதும் அணியின் ஸ்திரத்தன்மையை பாதித்தது. இந்த தொடரில் சிஎஸ்கே-விற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது கலீல் அகமது, நூர் அகமது பந்துவீச்சே ஆகும்.
மேலும், கடந்த சில போட்டிகளாக அணிக்குள் வந்து சிறப்பாக ஆடி வரும் இளைஞர்களான ஷைக் ரஷீத், ஆயுஷ் மேரா ஆகிய இருவரும் அடுத்தடுத்த சீசன்களில் சென்னைக்கு பலமாக மாறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
அனுபவ வீரர்களின் அனுபவம் பெரியளவில் கைகொடுக்காத நிலையில் இளைஞர்கள் பட்டாளத்தை அணிக்குள் கொண்டு வர வேண்டிய அவசியத்தை சிஎஸ்கே உணரத்தொடங்கியுள்ளது. அடுத்த போட்டிகளில் அதன் தாக்கத்தை காணாவிட்டாலும் அடுத்த சீசனிலே அதை காணலாம் என்று கருதப்படுகிறது.














