இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரும் நடைபெறும்போது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது ஆர்.சி.பி. அணியையே. இதுவரை 16 சீசன்களில் ஒரு முறைகூட கோப்பை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கி்னறனர்.
மட்டமான பவுலிங்:
பெங்களூர் அணி ஒவ்வொரு தொடரில் இறங்கும்போதும் ஏதாவது ஒரு பலவீனத்துடனே களமிறங்குகின்றனர். குறிப்பாக, பவுலிங் என்பது பெங்களூரில் எப்போதும் சரியாக அமையாமலே இருந்து வருகிறது. அது கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் கண்கூடாக தெரிந்தது.
விராட் கோலி, டூப்ளெசிஸ், மேக்ஸ்வெல், கிரீன், தினேஷ் கார்த்திக், ராவத், படிதார் என்ற நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட பெங்களூர் அணி 182 ரன்களை முதலில் பேட் செய்து எடுத்தது. சின்னசாமி மைதானத்தில் 182 ரன்கள் என்பது மிக மிக குறைவான இலக்கே ஆகும். கொல்கத்தா அணியினர் மிடில் ஓவர்களில் ஸ்லோ பந்துகள் வீசி பெங்களூர் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.
அதே வியூகத்தை பெங்களூர் கையில் எடுக்கும் என்று எதிர்பார்த்த ஆர்.சி.பி. ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால், கொல்கத்தா 17 ஓவர்களில் இலக்கை எட்டிவிட்டது. குறிப்பாக, பவர்ப்ளேவிலே அவர்கள் 85 ரன்களை எடுத்து ஆட்டத்தை கோட்டை விட்டு விட்டனர். சிராஜ், யஷ் தயாள், அல்ஜாரி ஜோசப் என யார் பந்துவீசியும் எந்த பலனும் இல்லை. வைஷாக் விஜயகுமார் மட்டுமே சிறப்பாக பந்துவீசினார்.
மாறுமா ஆர்.சி.பி.?
மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். சிராஜ் 3 ஓவர்களில் 46 ரன்களும், தயாள் 4 ஓவர்களில் 46 ரன்களும், ஜோசப் 2 ஓவர்களில் 34 ரன்களும் வாரி வழங்கினர். இவ்வளவு மட்டமான பந்துவீச்சை தொடர்ந்து வெளிப்படுத்தினால் இந்தாண்டும் பெங்களூர் அணி ஏமாற்றத்துடனே திரும்ப வேண்டும். 6 பந்துவீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் பந்துவீசியும் எந்த பலனும் ஆட்டத்தில் பெங்களூருக்கு சாதகமாக ஏற்படவில்லை.
இனி வரும் போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றியை தங்கள் வசமாக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.














