உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 2 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையில், இன்று இரு அணிகளும் மோதும் 3வது ஒருநாள் போட்டி நடக்கிறது. .
வெற்றி பெறுவது யார்?
ராஜ்கோட்டில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள இந்த போட்டியில் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்குகிறது. கடந்த 2 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி, பும்ரா ஆகிய மூவரும் அணிக்கு திரும்புகின்றனர்.
இவர்கள் அணிக்கு திரும்பியிருப்பதால் இந்திய அணி மேலும் பலம் அடைந்துள்ளது. முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வெல்வதற்கு உத்வேகமாக இருக்கும்.
அதேசமயம், கடந்த 2 போட்டியிலும் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெற்றி பெற முனைப்புடன் ஆடும். இந்த போட்டியில் இந்திய அணியில் சுப்மன்கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ரோகித்சர்மாவுடன் இஷன்கிஷன் ஆட்டத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒயிட்வாஷ்? ஆறுதல் வெற்றி?
ரோகித், விராட், கே.எல்.ராகுல். சூர்யகுமார்யாதவ் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் அசத்தும் என்று நம்பலாம். அதேசமயம், ஆஸ்திரேலிய அணியின் வார்னர், ஷார்ட், ஸ்மித், லபுஷேனே ஆகியோரும் சிறப்பாக ஆட முனைவார்கள்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யுமா? அல்லது ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்று பார்க்கலாம்.














