ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு பிறகு இந்திய அணி அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை கட்டமைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான முன்னெடுப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கியது.
தென்னாப்பிரிக்கா தொடர்:
அந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. தற்போது, இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில், 2வது டி20யில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. ஜோகன்ஸ்பர்க்கில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இரு அணிகளை பொறுத்தவரையிலும் பேட்டிங் பலமாக உள்ளது. ஆனால், இரு அணிகளிலும் பந்துவீச்சு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்றே கூற வேண்டும்.
பலம், பலவீனம்:
குறிப்பாக, இந்திய அணியின் பந்துவீச்சு சொதப்பலாகவே உள்ளது. சிராஜ், ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் இருந்தும் தென்னாப்பிரிக்க அணி கடந்த போட்டியில் 14 ஓவரிலே இலக்கை எட்டியது. அர்ஷ்தீப்சிங் ரன்களை வாரி வழங்கும் இயந்திரமாக உள்ளார். முகேஷ்குமார் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக வீசினார். கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கினார். இதனால், இந்திய அணி இந்த போட்டியில் பந்துவீச்சை சரி செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும்.
தென்னாப்பிரிக்க அணியில் ஜான்சென், வில்லியம்ஸ், கோட்ஸி ரன்களை வாரி வழங்குகின்றனர், ஆனால், ஷம்சி, கேப்டன் மார்க்ரம் கட்டுக்கோப்பாக பந்துவீசுகின்றனர். இது அவர்களுக்கு பலமாக அமைந்துள்ளது. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தென்னாப்பிரிக்க அணிக்கு ஹென்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், மில்லர், கிளாசென், பெரிய பலமாக உள்ளனர். அவர்களை விரைவில் அவுட்டாக்க வேண்டியது இந்தியாவிற்கு அவசியம் ஆகும். ஜான்செனும் அதிரடியாக ஆடக்கூடிய ஆல்ரவுண்டர் ஆவார்.
பேட்டிங் முக்கியம்:
இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் டக் அவுட்டாகிய சுப்மன்கில் – ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். திலக் வர்மா நீண்ட நேரம் களத்தில் நிற்க வேண்டும். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அசத்தலாக ஆடி வருகிறார். அவரது பேட்டிங் அதிரடி இன்றும் தொடர வேண்டும். இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக உருவெடுத்திருப்பவர் ரிங்கு சிங் ஆவார்.
ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய ரிங்குசிங், கடந்த போட்டியிலும் 39 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்தார். அவர் இன்றைய போட்டியிலும் தனது பங்களிப்பை அளித்தால் இந்திய அணி மிகப்பெரிய இலக்கையும் எட்டும், மிகப்பெரிய ஸ்கோரையும் நிர்ணயிக்கும் என்பது உறுதி ஆகும். இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.














