இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இதில் டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
2வது டெஸ்ட்:
இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இனறு கேப்டவுனில் நடக்கிறது. கேப்டவுன் மிகவும் பிரபலமான டெஸ்ட் கிரிக்கெட் மைதானம் ஆகும். கடந்த டெஸ்ட் தோல்வி இந்திய அணிக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். கடந்த போட்டியில் விராட் கோலி, கே.எல்.ராகுல் தவிர யாரும் சிறப்பாக ஆடவில்லை. குறிப்பாக, கேப்டன் ரோகித்சர்மா பெரிதும் ஏமாற்றினார்.
இந்த நிலையில், இன்று தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் செய்ய முடியும். இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித்சர்மா சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். சுப்மன்கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், அவர் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.
புத்தாண்டில் வெற்றி கிட்டுமா?
விராட் கோலி, கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய பலமாக உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் சிறப்பாக வீச வேண்டியது அவசியம் ஆகும். இன்று ஜடேஜா களமிறங்குவாரா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை அவர்கள் பலமாக உள்ளனர். கேப்டன் எல்கர் கடந்த டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். பெடிங்கம், ஜான்சென், மார்க்ரம், டோனி ஆகியோர் சிறப்பாக ஆடுகின்றனர்.
பந்துவீச்சில் ரபாடா மிரட்டுகிறார். அவருக்கு ஜான்சென், நிகிடி ஒத்துழைப்பு அளிக்கின்றனர். அவர்களை திறம்பட சமாளித்தாலே இந்திய அணி ரன்களை குவிக்க முடியும். புத்தாண்டில் இந்திய கிரிக்கெட் அணி ஆடும் முதல் போட்டி என்பதால் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இன்று மதியம் 1.30 மணியளவில் போட்டி தொடங்குகிறது.














