கடந்தாண்டு இறுதியில் டிசம்பர் மாதம் சென்னையை அச்சுறுத்திய மிக்ஜாம் புயல் தந்த பாதிப்பே சென்னைவாசிகள் நினைவில் இருந்து இன்னும் நீங்கவில்லை. அதற்கு அடுத்த சில தினங்களில் தென்மாவட்டங்களில் திடீரென கொட்டித் தீர்த்த பேய் மழையால் தென் தமிழக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இது தமிழ்நாடு முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
மிக கனமழை அபாயம்:
இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மாலை முதல் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழையாக பெய்து வந்த இந்த மழை அவ்வப்போது தூரல், தூரலாக பெய்து வருகிறது. ஆனாலும் மழை முழுதாக நிற்கவில்லை.
இந்த நிலையில், சென்னையில் இன்று நள்ளிரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ள தகவலில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை மாலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இன்று நள்ளிரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
மக்கள் அச்சம்:
இந்த மாவட்டங்களில் 75 மி.மீட்டர் முதல் 150 மி.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, டிசம்பரில் பெய்த மழையால் சென்னைவாசிகள் பெரும் அவதிக்கு ஆளான நிலையில் தற்போது மீண்டும் மழை மிரட்ட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சென்னைவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக்ஜாம் புயல் அளவிற்கு இந்த மழை தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது.














