இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றே உலக நாடுகளால் போற்றப்பட்டு வருகிறது. ஆனால், சமீபகாலமாகவே நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் பலரையும் வேதனையடைய வைத்துள்ளது. கடந்த நூற்றாண்டில் நாட்டில் நடந்த மதக்கலவரங்கள் இன்றளவும் நினைத்து பார்த்தால் மிகவும் கொடுமையானது ஆகும்.
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி:
இந்த நிலையில், பல காலமாக நீடித்து வந்த அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டு அமைதியாக திறக்கப்பட்டாலும், அயோத்தி ராமர் கோயிலை கட்ட உத்தரவிட்ட நீதிமன்றம் பாபர் மசூதியையும் கட்ட உத்தரவிட்டிருந்தது. அதற்கான நிலமும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை பாபர் மசூதி கட்டப்படவில்லை.
இந்த நிலையில், நீண்ட காலமாக நீடித்து வந்த ஞானவாபி மசூதி சர்ச்சையில் நேற்று ஞானவாபி மசூதியின் ஒரு பகுதியில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், 7 நாட்களுக்குள் பூஜை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை இந்துத்வா அமைப்புகள் கொண்டாடினாலும் சமூக ஆர்வலர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதநல்லிணக்கத்திற்கு ஆபத்தா?
அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், அப்போது ஏற்பட்ட மதக்கலவரத்தில் நாடே தீக்கிரையானதும் மறக்க முடியாத மோசமான நிகழ்வாகும். இந்த சூழலில், ஒரு மார்க்கத்தினர் வழிபடும் தலத்தில் மற்றொரு மார்க்கத்தினர் உள்ளே சென்று வழிபட அனுமதி வழங்கியிருப்பது வீண் சிக்கல்களையும், வீண் பிரச்சினையையும் ஏற்படுத்த வழிவகுத்திடும் என்று தெரிகிறது.
உலகப் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலின் பக்கத்திலே ஞானவாபி மசூதி அமைந்திருப்பதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தால் பெரும் சிக்கல் உண்டாகும் என்றும் மக்களும், சமூக ஆர்வலர்களும் அச்சப்படுகின்றனர். இதனால், இந்த விவகாரத்தில் நாட்டின் மதநல்லிணக்கத்திற்கு துளியளவும் ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.














