இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாகும். நாடு முழுவதும் வரும் 12-ந் தேதியான ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகள் எல்லாம் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிகிறது. புத்தாடைகள் எடுக்கவும், பட்டாசுகள் வாங்கவும், நகைகள் வாங்கவும் மக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை தினத்தில் எண்ணெய் தேய்த்து சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது ஏன்? என்று எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? வட இந்தியாவில் 5 நாளாக கொண்டாடப்படுகிறது தீபாவளி பண்டிகை. இந்த பண்டிகை நாளில் மக்கள் புண்ணிய நதியான கங்கையில் நீராடுவது வழக்கம் ஆகும்.
எண்ணெய் தேய்ப்பது ஏன்?
நீரானது மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான ஒன்றாக மட்டுமின்றி, அது தெய்வமாகவும் கருதப்படுகிறது. தண்ணீரில் கங்காதேவி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகிறது. அதேபோல, தீபாவளியன்று நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் தலைக்கு தேய்க்க வேண்டும் என்றும் கூறுவார்கள்.
நல்லெண்ணெய்யில் மகாலட்சுமியும், சீயக்காயில் தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.
இதன் காரணமாகவே, நரகாசுரனை வதம் செய்த நாளில் அதிகாலையிலே வீட்டில் உள்ள பெரியவர்கள் கையால் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து, உடல் முழுவதும் தேய்த்துக் கொண்டு சுடு தண்ணீரில் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இவ்வாறு குளிப்பதால், கங்கை நதியில் நீராடுவதற்கு சமம் என்று புராணங்களில் கூறப்படுகிறது.
உடல் சூடு தணியும்:
நல்லெண்ணெயில் வாசம் செய்வதாக கருதப்படும் மகாலட்சுமி தேவி இந்த இடத்தில் பணத்தை மட்டும் குறிக்காமல், நல்ல தோற்றத்தையும் உணர்த்துகிறார். இது மட்டுமின்றி, உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும்போது உடலில் உள்ள சூடு தணியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். உடல் அளவுக்கு அதிகமாக சூடாக இருந்தால் கடுமையான வயிற்றுப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல, தீபாவளி பண்டிகையன்று நம்மால் இயன்ற உதவியை அடுத்தவருக்கு செய்வதும் மிகவும் புண்ணியம் ஆகும்.













