தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
தீபாவளி பண்டிகை
தமிழ்நாட்டில் தொழில் மற்றும் கல்விக்காக பெரும்பாலான மக்கள் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை ஆகிய நகரங்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனார் வெளியூரைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். குறிப்பாக, சுமார் 1 கோடி மக்கள் அளவில் வசிக்கும் சென்னையில் ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுக்கும், தொடர் விடுமுறைக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சுமார் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து ஏராளமானோர் இன்று முதல் வெளியூர் செல்லத் தொடங்கி வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
வாகன ஓட்டிகள் அவதி:
இந்த சூழலில், சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் சூழலில், இன்று மாலை முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், வெளியூர்களுக்கு மக்கள் கூட்டம், கூட்டமாக செல்வதாலும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. மழைக்காலம் என்பதாலும், பண்டிகை காலம் என்பதாலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் முன்னேற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.














