ஒவ்வொரு ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியை அனைவரும் உற்சாகமாக தொடங்கினாலும், கடைசி மாதமான டிசம்பரில் பலருக்கும் வருத்தங்களும், வேதனைகளும் இருப்பது இயல்பு. ஆனால், தமிழ்நாட்டிற்கும் டிசம்பர் மாதத்திற்கும் பல ஆண்டுகளாகவே ஏழாம் பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும்.
டிசம்பர்:
வழக்கமாக, கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் மாதம் என்றாலே சென்னையை புரட்டிப்போடும் அளவிற்கு ஏதாவது இயற்கை பேரிடர் ஒன்று அமைந்துவிடும். ஆனால், இந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டையே தத்தளிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக இந்த மாத தொடக்கத்தில் தலைநகர் சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையே மக்களை வாட்டி வதைத்தது. அந்த துயரத்தில் இருந்த சென்னைவாசிகள் பலரும் இன்னமும் மீளாத நிலையில், திடீரென்று திருநெல்வேலியில் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தத்தளிக்கும் திருநெல்வேலி:
தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டதும், 30 மணி நேரம் இடைவிடாது நெல்லையில் மழை பெய்ததும் சுமார் 1992ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதன்முறை ஆகும். 1992ம் ஆண்டு இதுபோன்று நிகழ்ந்த சம்பவத்தாலும், அப்போது தண்ணீரை திறந்துவிட்டதாலும் ஒரு கிராம மக்களே தூக்கத்திலே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறிய சோகமும் உண்டு.
இந்த நிலையில், தற்போது நெல்லையில் பெய்த மழை காரணமாக மக்கள் உயிரிழப்பு ஏதும் இதுவரை இல்லை என்றாலும், சேதம் என்பது மிகவும் மோசமாக உள்ளது. திருநெல்வேலி மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டமும் மிக மோசமான நிலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் வௌ்ளமென பெருக்கெடுத்து ஓடியதும், ரயில்கள், பேருந்துகள் என போக்குவரத்து சேவை நேற்று மொத்தமாக நெல்லை, கன்னியாகுமரி. தூத்துக்குடி செல்லாமல் முடங்கியதும் பல ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதன்முறை ஆகும்.
முடங்கிய மக்கள்:
சென்னையுடன் ஒப்பிடும்போது நெல்லையில் ஆறுகள், குளங்கள் ஆக்கிரமிப்பு என்பதும், தூர்வாராமல் இருக்கிறது என்பதும் மிக மிக குறைவே ஆகும். அப்படியிருக்கையில் ஒரே நாளில் இப்படி ஒரு பேய் மழை பெய்தது என்பது மோசமான நிகழ்வே ஆகும். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மட்டும் 95 செ.மீட்டர் மழை பெய்தது. இது முன் எப்போதும் இல்லாத ஒரு நிகழ்வாகும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மிகவும் மோசமான நிலைக்கு ஆளான நிலையில், அண்டை மாவட்டங்களான விருதுநகர், மதுரை, கன்னியாகுமரியிலும் மழை வெளுத்து வாங்கியது. காய்ந்த பூமி எனப்படும் ராமநாதபுரத்திலே பல இடங்களில் தண்ணீர் வெள்ளம்போல ஓடியது. எந்த புயலும் இல்லாமல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே இந்தளவு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்தாண்டு டிசம்பர் தமிழ்நாட்டையே தத்தளிக்க வைத்த மாதமாக மாற்றியுள்ளது.














